முன்னாள் லிபிய தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன்மார்களில் இரண்டாமவரும் மற்றும் மிக முக்கியமானவருமான சைஃப் அல் – இஸ்லாம் கடாபி கடந்த 3ம் திகதி லிபிய தலைநகர் திரிப்போலிக்கு தென்மேற்கே 85 மைல் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் தங்கியிருந்த வீட்டைத் தாக்கிய “முகமூடி அணிந்த நான்கு நபர்களால்” அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில பிரிவினரால் ஒரு காலத்தில் லிபியாவில் கடாபியின் அடுத்த அரசியல் வாரிசாக கருதப்பட்ட 53 வயதான சைஃப் அல்– (Saif al-Islam Gaddafi,) இஸ்லாமின் இறுதிச் சடங்கிற்காக, மேற்கு லிபிய நகரமான பானிவாலிட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
2011 அரபு வசந்த எழுச்சிக்குப் பின் லிபியாவைப் பிளவுபடுத்தி அதன் ஸ்திரமின்மைக்கு வழிவகுத்த பிளவுகளை இங்கு கூடிய சனத்திரள் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது.
மக்கள் ஒரு காலத்தில் அமைதி நல்லிணக்கம் மற்றும் செழிப்புடன் வாழ்ந்த, இந்த வளமான நாட்டை சைஃப் அல்-– (Saif al-Islam Gaddafi,) இஸ்லாமின் கொலை மேலும் சீர்குலைக்கும்.
Khalifa Haftar
1969ல ஆம் ஆண்டு முஅம்மர் கடாபியுடன் இணைந்து மன்னர் இத்ரிஸை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவரும், பின்னர் கடாபியுடன் கருத்து வேறுபாடு கொண்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து, அங்கு 20 ஆண்டுகள் வாழ்ந்தவருமான கடாபியின் முன்னாள் சகாவும் இன்று லிபியாவின் யுத்த பிரபுவுமாக உள்ள கலீஃபா ஹாஃப்டார் (Khalifa Haftar) தான் இந்தக் கொலையால் பயனடையும் முக்கிய நபராக இருப்பார்.
வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள நேரத்தில் நாட்டை மீண்டும் ஒரு வளமான தேசமாக மேம்படுத்துவதாக உறுதியளித்து, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருந்த நிலையில் சைஃப்பின் மரணம் சம்பவித்துள்ளது.
லிபியாவில் அவர் ஒருபோதும் உத்தியோகபூர்வ பதவி நிலைகளில் இருந்ததில்லை. ஆனால், 2000 முதல் 2011 வரை அவரது தந்தைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் அவர் கருதப்பட்டார்.

முஅம்மர் கடாபி
அவரின் தந்தை முஅம்மர் கடாபி அமெரிக்க-பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் லிபிய எதிர்ப்புப் படைகளால் வேட்டையாடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அத்தோடு கடாபியின் பல தசாப்த கால ஆட்சியும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

Saif al-Islam Gadhafi
லண்டன் பொருளாதார கல்லூரியில் படித்தவரும், சரளமாக ஆங்கிலம் பேசுபவருமான சைஃப் அல்இ– ஸ்லாம், (Saif al-Islam Gadhafi) ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட கொள்கை போக்கை முன்வைத்தார். அத்தோடு 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் முதல் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை சீர் செய்வதற்கான முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
லிபியா தனது பேரழிவு ஆயுதங்களை கைவிடுவது, மற்றும் 1988 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஸ்காட்லாந்தின் ‘லொக்கர்பி பான் ஆம்’ விமான குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 103 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
அவர் அரசியல் அரங்கில் ஒரு சீர்திருத்தவாதியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அரசியலமைப்புக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். உலகளாவிய ரீதியில் நிர்வாகங்களை சீர்திருத்துவதில் சிவில் சமூகத்தின் பங்கு குறித்து அவர் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அவர் எந்தவிதமான உத்தியோகபூர்வ பதவிகளையும் வகிக்கவில்லை, என்றாலும் கூட சைஃப் அல்- – இஸ்லாம் (Saif al-Islam Gadhafi) ஒரு காலத்தில் தனது தந்தை முஅம்மர் கடாபிக்குப் பிறகு லிபியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டார்.
2011 ஆம் ஆண்டில் கடாபியின் நீண்ட ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி வெடித்த போது சைஃப் அல்-–இஸ்லாம் (Saif al-Islam Gadhafi) உடனடியாக தனது பல்வேறு விதமான நட்புகளைவிட, குடும்ப மற்றும் குல விசுவாசத்தைத் தெரிவு செய்து கிளர்ச்சியாளர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையின் சிற்பியாக மாறினார். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை அவர் எலிகள் என்று வர்ணித்தார்.
கிளர்ச்சியின் போது ரோய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம் பேசிய அவர் “நாங்கள் இங்கே லிபியாவில் போராடுகின்றோம் இங்கே லிபியாவில் இறக்கின்றோம்” என்றார்.
இரத்த ஆறுகள் ஓடும் என்றும் அரசாங்கம் கடைசி ஆண், பெண் மற்றும் புல்லட் வரை போராடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கிளர்ச்சியாளர்கள் தலைநகர் திரிப்போலியைக் கைப்பற்றிய பிறகு சைஃப் அல்-–இஸ்லாம் ஒரு நாடோடி பழங்குடியினரைப் போல உடையணிந்து அண்டை நாடான நைஜருக்கு தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது அபு பக்கர் சாதிக் பிரிகேட் என்ற பிரிவின் போராளிகள் அவரை ஒரு பாலைவன சாலையில் அடையாளம் கண்டு பிடித்தனர். அவரது தந்தை சந்தேகத்திற்கிடமான பிரெஞ்சு முகவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அவரை மேற்கத்திய நகரமான ஜின்டானுக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் ஜின்டானில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த தடுப்புக் காவல் வாழ்வு கடாபியின் கீழ் அவர் வாழ்ந்த கவர்ச்சியான வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது.
அந்த வாழ்க்கையின் போது அவரது செல்லப் பிராணிகளாக புலிகள் இருந்தன. வேட்டையாட பருந்துகளைப் பயன்படுத்தினார். மேலும், லண்டன் செல்லும் போதெல்லாம் பிரிட்டிஷ் உயர் மட்ட சமூகத்துடன் தொடர்பில் இருந்தார்.
2015 ஆம் ஆண்டில் திரிப்போலியில் உள்ள நீதிமன்றத்தால் சைஃப் அல்-–இஸ்லாமுக்கு போர்க்குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை துப்பாக்கி அணியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அவரைத் தேடி வந்தது.
அது அவருக்கு எதிராக “கொலை மற்றும் துன்புறுத்தலுக்காக” கைது பிடிவிறாந்து பிறப்பித்தது. 2017 ஆம் ஆண்டில் பொது மன்னிப்புச் சட்டத்தின் கீழ் போராளிகளால் அவர் விடுவிக்கப்பட்ட பின்னர், தான் படுகொலை செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, சைஃப் ஜின்டானில் பல ஆண்டுகளை மறைமுகமாக கழித்தார்.
இவற்றை எல்லாம் தாண்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடுநிலை பேச்சுவார்த்தையாளர் மற்றும் செல்வாக்கு செலுத்துபவராக சைஃப் அல்-–இஸ்லாம் பல வெற்றிகளையும் முக்கிய பாத்திரங்களையும் தன்வசம் கொண்டிருந்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய சக்திகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
மதச்சார்பற்ற ஒரு நாட்டு தீர்வின் மூலம் பலஸ்தீன--– இஸ்ரேலிய மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் “இஸ்ராதீன்” உள்ளிட்ட பலயோசனைகள் அவரிடம் இருந்தன.
பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் அவர் நடத்தினார். இதன் விளைவாக 2001 இல் அங்கு ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.
2011 இல் அரபு வசந்தத்தின் மூலம் ஏற்பட்ட குழப்ப நிலையிலிருந்து மீண்டு வர லிபியா இன்னமும் போராடி வருகின்றது.
தற்போது லிபியாவில் திரிபோலியை தளமாகக் கொண்ட பிரதம மந்திரி அப்தல்ஹமித் த்பீபாவின் ஐ. நா. ஆதரவு அரசாங்கத்திற்கும், கிழக்கு லிபியாவில் ஆதிக்கம் செலுத்தும் இராணுவத் தலைவரும் சுய-பாணியிலான லிபிய தேசிய இராணுவத்தின் (எல்.என்.ஏ) தளபதியுமான கலீஃபா ஹாஃப்டார் (Khalifa Haftar )ஆதரவுடன் இயங்கும் கிழக்கு நிர்வாகத்திற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

(Khalifa Haftar )
லிபியாவின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்பை ஹாஃப்டார் (Khalifa Haftar )கட்டுப்படுத்துகின்றார் மற்றும் ஓர் உண்மையான ஆட்சியாளரை போல் அவர் செயல்படுகின்றார். திரிப்போலியில் ஐ. நா. ஆதரவு அரசாங்கத்தை அவர் எதிர்க்கின்றார் மற்றும் ஒரு கூட்டணி மூலம் அதிகாரத்தை தன்வசம் தக்க வைத்திருக்கின்றார்.
இஸ்லாமிய போக்கிற்கு எதிரானவர் என்று கூறப்படும் ஹாஃப்டார் லிபிய-–(Khalifa Haftar ) அமெரிக்க இரட்டை பிரஜா உரிமை பெற்ற குடி மகன் ஆவார்.
ஆகஸ்ட் 2016 ல் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆதரவைப் பெற்ற புதிய தேசிய உடன்பாட்டு அரசை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.
புதிய தேசிய உடன்பாட்டு அரசுடன் ஒத்துழைப்பது கிழக்கு லிபியாவில் தனது செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வர வழிவகுக்கும் என்று ஹாஃப்டார் அஞ்சுவதாகவும், “லிபியாவில் சமாதானத்துக்கு தனிப் பெரும் தடையாக” அவர் கருதப்படலாம் என்றும் லிபியா சம்பந்தமான விடயங்களில் நிபுணரும் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான அலிசன் பார்கெட்டர் என்பவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து போன்றன தொடர்ந்தும் ஹாஃப்டாருக்கு ஆதரவளிக்கின்றன. பிரிட்டிஷ் பிரெஞ்சு அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரக விமானப் படைகள் அவரின் படைகளுக்கு உதவியுள்ளதாக ‘மிட்ல் ஈஸ்ட் ஐ’ இணையம் தெரிவித்துள்ளது.
2011 பெப்ரவரியில் இடம்பெற்ற அரபு வசந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, லிபியாவில் தொடங்கிய போராட்டங்கள் ஆயுத மோதலாக விரிவடைந்தன.
இதன் விளைவாக வன்முறை கலந்த உள்நாட்டு அதிகாரத்துக்கான போராட்டம், நேட்டோ தலைமையில் நீடித்த இராணுவத் தலையீடு, அதைத் தொடர்ந்து அரச நிறுவனங்களின் சரிவு என்பனவற்றின் மூலம் லிபியா அதள பாதாளத்தில் வீழ்ந்தது.
இந்த மோதல் அதுவரை லிபியாவை முஅம்மர் கடாபியின் கீழ் ஒருங்கணைக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு அரசு என்ற நிலையில் இருந்து, உள்நாட்டுப் போர் போராளிகள் ஆட்சி மாற்றங்கள் கடுமையான உள்கட்டமைப்பு சேதங்கள் என்பனவற்றால் பாதிக்கப்பட்ட துண்டு துண்டாக கூறுபோடப்பட்ட தேசமாக மாற்றியது.
லிபியாவை குண்டுவீசி அழித்து அதன் அப்பாவி மக்களை படுகொலை செய்த அமெரிக்கா லிபியாவின் செல்வத்தை சூறையாடியது.
அமெரிக்காவுக்கு ஹாஃப்டார் ஒரு பெரிய சொத்து. இவ்வாறுதான் சைஃப் அல் இஸ்லாமின் கொலை அமெரிக்கா, -ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து லிபிய செல்வத்தை தொடர்ந்து சூறையாடவும் அந்த நாட்டை கொந்தளிப்பில் வைத்திருக்கவும் வழியமைத்துள்ளது.
-லத்தீப் பாரூக்-

