“”தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்ற கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதுமட்டுமின்றி புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து உள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க. (அன்புமணி), தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தமிழகத்தில் இந்த கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2-வது கட்டமாக தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி, புதுச்சேரியை தொடர்ந்து, மதுரைக்கு வருகை தந்தார். பல்வேறு அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, கார் மூலம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவில், மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில் பிரதமர் மோடி வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply