“ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன.இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோட்டா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது.
இந்தப் போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்தது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்துவதற்கும் ஸ்பெயின் அரசு மறுத்துவிட்டது.
இதனால் அமெரிக்கா-ஸ்பெயின் இடையேயான வர்த்தகத்தை முற்றிலும் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஈரானுக்கு எதிரான போரில் ராணுவ உதவிகளை செய்ய ஸ்பெயின் மறுத்துவிட்டது.
ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்துக் கொள்கிறோம். இனி ஸ்பெயினுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இப்போது ஸ்பெயின் அவர்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டது.
நாங்கள் விரும்பினால் அவற்றைப் பயன்படுத்துவோம். நாங்கள் அங்கு பறந்து செல்வோம். யாரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது” என்றார். “,
ஸ்பெயின் பிரதமர் கூறியது என்ன?
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், 10 நிமிட தொலைக்காட்சி உரையில், யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இராக் போர் பற்றி பேசினார். மேலும் “போர் வேண்டாம்” என்பதுதான் ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று கூறினார்.
ஸ்பெயின் மக்கள் மீது டிரம்பின் அச்சுறுத்தல் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான பொருளாதார நடவடிக்கைகளை தன் அரசு ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார்.
“நாம் ஆயதுல்லாக்களின் பக்கம் இருக்கிறோமா என்பது கேள்வி அல்ல. நாம் அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களை ஆதரிக்கிறோமா என்பதுதான் கேள்வி.”
அரசாங்கத்தின் நிலைப்பாடு யுக்ரேன் மற்றும் காஸா மீதான அதன் நிலைப்பாட்டுக்கு ஒப்பானது என்று அவர் விளக்கினார். 2023-இல் ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஸா விவகாரம் குறித்து ஐரோப்பாவில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் அரசாங்கங்களில் ஸ்பெயினும் ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகளை “இனப்படுகொலை” என்று வர்ணித்து, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செய்வதற்கு முன்பே பாலத்தீன அரசை ஸ்பெயின் அங்கீகரித்தது.

