தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் தாக்கம் இன்று பெரிய அளவில் தீவிரமடைந்து உள்ளது. இன்று காலை முதல் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் அமெரிக்க போர் கப்பல்களை ஈரான் தாக்கி கடலில் மூழ்கடித்த நிலையில், 3 தரப்பிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் நாட்டின் முக்கிய பாதுக்காப்பு படையான IRGC புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இஸ்ரேல் அரசின் தூக்கத்தை தொலைத்துள்ளது.
IRGC கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்மூஸ் நீர்வழி பாதையில் இஸ்ரேல் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு கப்பல் ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
IRGC கடற்படை வெளியிட்ட தகவலின்படி, ‘MSC Ishyka’ எனப்படும் அந்த கப்பல் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டு தீப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அக்கப்பல் ஹார்மூஸ் நீர்வழி பாதையில் கடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும், அங்கேயே நின்று கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.
போரின் தீவிரம்
இந்த சம்பவம், ஈரான் – இஸ்ரேல் மோதல் அடுத்தக்கட்டத்தை தொடங்கியுள்ளதற்கான முக்கிய சிக்னலாக பார்க்கப்படுகிறது.
ஹார்மூஸ் வழித்தடம் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு எவ்வளவு முக்கியமானது என கடந்த 5 வாரத்தில் உலக நாடுகளுக்கு தெரிந்திருக்கும்.
இப்பாதையில் ஏற்படும் எந்தொரு தாக்குதலும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
ஈரானின் இந்த புது தாக்குதல் மூலம் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரிக்கிறது.
பல நாடுகள் கப்பல் போக்குவரத்துக்கான பேச்சுவார்த்தை கூட நிறுத்திவிடும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே காப்பீட்டு செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு உருவாகிறது.
கச்சா எண்ணெய் விலை
இந்த சூழ்நிலையில், ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் விலையை கூடுதலாக அதிகரிக்கக்கூடும்.
இன்று WTI கச்சா எண்ணெய் விலை 11.41 சதவீதம் அதிகரித்து 111.5 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 7.78 சதவீதம் உயர்ந்து 109.0 டாலராக உள்ளது.
இந்த தாக்குதல், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுவது, இஸ்ரேல் – ஈரான் மத்தியிலான மோதலை விரிவுபடுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரான் அதிரடி ஆக்ஷன்
ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் பல ஏவுகணைகளை தங்கள் நாட்டின் மீது ஏவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
துபாய்
இதே நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாதுகாப்பு அமைச்சகம், இன்று மட்டும் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 56 ட்ரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்த்து தடுத்ததாக தெரிவித்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தமாக 498 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 23 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,141 ட்ரோன்களை ஈரான் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்மூஸ் வழித்தடத்தில் நடந்த இந்த ட்ரோன் தாக்குதல், சாதாரண பாதுகாப்பு குறைபாடு அல்ல,
இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதிக்கக்கூடிய முக்கிய பிரச்சனையாகும். ஈரான் போரில் முதல் முறையாக கடல் வழித்தடங்களைத் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த கட்டத்தில் எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிக பாதிப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது.

