ஆப்கானிஸ்தானில் தமது நாட்டு குடிமக்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமானம் இரானுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக யுக்ரேன் வெளியுறவு துணை அமைச்சர் கூறியதாக இன்று சில ஊடகங்களில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த தகவலை யுக்ரேனின் வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒலே நிகோலேன்கோவை மேற்கோள்காட்டி யுக்ரேனிய செய்தி முகமையான இன்டர்ஃபேக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “காபூலிலோ வேறு எங்கோ எங்கள் நாட்டு விமானம் கடத்தப்படவில்லை.
இது தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை,” என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள யுக்ரேனியர்களை மீட்க அனுப்பிய மூன்று விமானங்கள் மூலம் இதுவரை 256 பேர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய செய்தி முகமையிடம் பேசிய யுக்ரேனிய துணை அமைச்சர், ஆப்கானிஸ்தானில் நிலவும் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் அங்குள்ள தூதரக ஊழியர்கள் மற்றும் குடிமக்களை மீட்டு அழைத்து வருவதில் நிலவும் அசாதாரணமான நிலைமையை விளக்கினார்.
அந்த நாட்டை விட்டு வெளியே கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே கூறியிருந்தார் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி யுக்ரேனியர்களுடன் வந்த மூன்றாவது மீட்பு விமானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கீஃபில் விவரிக்கும் யுக்ரேன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் யெவன் யெனின்.
முன்னதாக, யுக்ரேனிய துணை அமைச்சர் ரஷ்ய செய்தி முகமையிடம் பேசியதாக வெளியான தகவலில், காபூல் விமான நிலையத்தில் இருந்த தங்கள் நாட்டு விமானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இரானுக்கு கடத்திச் சென்று விட்டதாகவும் அங்குள்ள யுக்ரேனியர்கள் விமான நிலையத்துக்குள் வர முடியாததால், அவர்களை மீட்க மூன்று முறை மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை என்றும் பேசியதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், தற்போது இந்த தகவல் தவறானது என்று யுக்ரேனிய வெளியுறவுத்துறை மறுத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தற்போது என்ன நிலை?
ஆப்கானிஸ்தானின் ஆளுகையை தாலிபன்கள் கைப்பற்றும் முன்பாகவே தங்களுடைய தாயகத்தை விட்டு ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறியதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் அண்டை நாடுகளான இரான், பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த வகையில் கிட்டத்தட்ட பாகிஸ்தானில் 2020இல் 15 லட்சம் பேரும், இரானில் ஏழு லட்சத்து 80 ஆயிரம் பேரும் தஞ்சம் அடைந்ததாக கூறுகிறது அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தரவு.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாயகத்தை விட்டு வெளியேற காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டுப் படைகள் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பது பற்றி ஜி7 உச்சி மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஆப்கனில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு அங்கிருந்து வெளியேற கால அவகாசம் கோருவதே சரியாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் அதிபர் ஜோ பைடன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறுகிறார் பிபிசியின் ராஜீய விவகாரங்கள் செய்தியாளர் பால் ஆதம்ஸ்.