இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு வெற்றி பெற்று இரண்டும் சமநிலையில் இருந்தன.
இந்த நிலையில், வெற்றி அணியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வியாழக்கிழமை கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து களமாடியது. ஆனால், தொடக்கம் முதலே இறங்குமுகமாக இருந்த இந்திய அணி கெய்க்வாட், அணி கேப்டன் ஷிகர் தவான் இணையில் ஐந்து ரன்கள் எடுத்தது. ஒரு ரன் கூட எடுக்காமல் தவான் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வீரர்களின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
கொரோனா காரணமாக ஐந்து பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 5 ஓவரில், 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
6 வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர், பேட்டிங் செய்ய களமிறங்கினார். அடுத்த சில நிமிடத்தில் நிதிஷ் ராணா (6) அவுட் ஆனார்.
பேட்ஸ்மென்களில் 8 பேர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ருத்ராய் கெய்க்வாட் 19, குல்தீப் 23, புவனேஷ்குமார் 15 ரன்களை எடுத்திருந்தனர்.
இப்படியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை குவித்திருந்தது. குல்தீப்பும் ஐந்து எடுத்திருந்த சக்காரியாவும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை அணி மோதலுடன் செப்டம்பரில் போட்டி – அட்டவணை இதோ
IND vs ENG: கடைசி டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா
இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மைதானத்தில் களமாடிய இலங்கை அணி, தொடக்கத்தில் சுமாராக ஆடினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டது.
இந்திய அணி பந்து வீச்சாளர் ராகுல் சஹார் பந்து வீச்சில் இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷிங்கா 18 வந்துகளில் 12 ரன்களுடனும் மினோத் பானுகா 27 பந்துகளில் 18 ரன்களுடனும் வெளியேறினர். சதீரா சமரவிக்ரமா 13 பந்துகளில் 6 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் சென்றார்.
ஆனால், பின்னர் நுழைந்த தனஞ்செய, ஹசரங்கா ஜோடி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடியில் தனஞ்செய 20 பந்துகளில் 23 ரன்களையும் ஹசரங்கா 9 பந்துகளில் 14 ரன்களையும் எடுத்தனர். இந்திய வீரர் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்த போட்டியில் இலங்கை தரப்பில் சிறந்த ஆட்ட நாயகனாக ஹசரங்கா, சிறந்த பேட்ஸ்மேனாக தனஞ்செய டி சில்வாவும், இந்தியா தரப்பில் குல்தீப் யாதவும் சிறந்த பெளலராக ராகுல் சாஹரும் தேர்வாகினர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 2க்கு 1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது.
சிறப்புகள் என்ன?
2021 ஜூலை 29, ஆட்ட நாள்தான் இலங்கை வீரர் ஹசரங்காவின் 24ஆவது பிறந்த தினம். அதனால், ஆட்டம் தொடங்கும் முன்பிருந்தே அவருக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உற்சாகமூட்டினர்.
வலது கை ஸ்பின்னரான ஹசரங்கா, டி20ஐ பெளலர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
ஒட்டுமொத்த 20 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகளை மட்டுமே இந்திய அணி அடித்திருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி
டி20 இன்டர்நேஷனல் வரலாற்றில் இந்தியாவை முதல் முறையாக இலங்கை வீழ்த்தியிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று தடுப்பு வழிகாட்டுதல்கள் காரணமாக இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனோ முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகியதாக அறியப்பட்ட வீரர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த வீரர்கள் மட்டுமே ஆடுகளத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
டி20 இன்டர்நேஷனல் போட்டியில் இந்த அளவுக்கு மோசமாக இந்தியா ஆடியது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு இந்தியா 2008இல் ஆஸ்திரேலியாவுடன் மோதி 74 ரன்களை குவித்தது. அதன் பிறகு 2016இல் நியூசிலாந்துடன் மோதி 79 ரன்களை எடுத்திருந்தது.