திட்டக்குடி: திட்டக்குடியில் வெறும் 500 ரூபாய் கூலிக்காக விவசாயி ஒருவரைக் கூலிப்படையினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திட்டக்குடி அருகே ராமநத்தத்தை சேர்ந்த விவசாயி தங்கராசு . இவரது மனைவி பரமேஸ்வரி . இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று தங்கராசு வீட்டு வராண்டாவிலும், பரமேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் வீட்டின் அறையிலும் தூங்கினர்.
கொலை செய்யப்பட்ட விவசாயி: மறுநாள் காலையில் தங்கராசுவை யாரோ வெட்டி கொன்று விட்டதாக பரமேஸ்வரி அலறினார். இதையடுத்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதலனால் கொலை:இந்த கொலையில் பரமேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவனை தனது கள்ளகாதலன் ரவிச்சந்திரன் உதவியோடு கூலிப்படை மூலம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அம்பலம்:இதையடுத்து பரமேஸ்வரியும், அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெண்ணாடத்தை சேர்ந்த கூலிப்படைத்தலைவன் சுவிட்லின் மூலம் தங்கராசுவை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து சுவிட்லின் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
கூலிப்படையினர் கைது:இதில் சுவிட்லின் கூட்டாளிகளான 3 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்த ரமேஷ் , கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த நரேஷ்குமார் , புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜி என்பது தெரிய வந்தது.
500 ரூபாய்க்கு ஒரு கொலை:இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது தங்கராசுவை கொல்ல கூலிப்படை தலைவனான சுவிட்லின் தங்களுக்கு தலா ரூபாய் 500 கொடுத்ததாகவும், பின்னர் மீதி பணத்தை தருவதாக கூறியதையடுத்து தங்கராசுவை அரிவாளால் வெட்டி கொன்றதாக தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டை: இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூலிப்படை தலைவன் சுவிட்லினை தேடி வருகிறார்கள்.