டெல்லியில் மீடியாக்களிடம் பிரதமர் மோடி அரசின் அதிகாரபூர்வ அதிகாரி என்கிற பேனரில் ரூ. 500, ரூ.2,000 புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்திய அந்த அதிகாரியை யாரும் மறக்கமுடியாது. தலை முழுக்க…வெள்ளை முடி! பிரதமர் மோடியின் பொருளாதார சர்ஜிகல் அட்டாக் விஷயத்தில் ‘மாஸ்டர் பிரைய்ன்’ ஆக செயல்பட்டவர். மீடியாக்காரர்களில் எந்தக் கேள்விக்கும் சளைக்காமல் பதில் அளிக்கும் விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அவர் யார்?
மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் வரும் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளராக தற்போது இருக்கிறார். பூர்வீகம் ஒடிஸா. 1980 ஐ.ஏ.எஸ். பேட்ஜ். தமிழக கேடர் ஆபீஸர். சக்தி காந்த தாஸ், இன்னும் அவர் ஒய்வு பெற நாலு மாதங்களே இருக்கிறது. 2008-ம் வருடம் டெல்லியில் மத்திய அரசின் பணிக்காக சென்றார். அதற்கு முன்பு வரை, தமிழக அரசின் வருவாய்த்துறை கமிஷனர், வணிக வரித்துறைச் செயலாளர், தொழில் துறைச் செயலாளர் என்று பல்வேறு பதவியில் இருந்தவர். ஆரம்பத்தில் திண்டுக்கல் கலெக்டராகவும் இருந்திருக்கிறார்.
தமிழகத்தில் தொழில்துறை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டியவர். அவர் டெல்லிக்கு சென்றதும், முழுக்க முழுக்க நிதித்துறையின் ஸ்பெஷலிஸ்ட் ஆகவே மாறிவிட்டார். பட்ஜெட் தயாரிப்பில் ஏ டூ இசட் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கும் கில்லாடி. 2008 முதல் 2013 வரையில் நிதித்துறையின் பல்வேறு பதவிகளில் இருந்தவர்.
2014-ல் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, சக்தி காந்ததாஸை மத்திய அரசின் வருவாய்த்துறைச் செயலாளராக நியமித்தார். பவர்ஃபுல் பதவியில் அமர்ந்த இவரின் தலைமையின் கீழ் நேரடி வரி போர்டு, எக்ஸஸ் மற்றும் கஸ்டம்ஸ் போர்டு.. இரண்டும் செயல்பட்டது. 2015-ல் மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்திய பணக்காரர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் பிரதமர் மோடி, அதற்கான முழு பொறுப்பை இவரிடம்தான் ஒப்படைத்திருக்கிறார். ஸ்விஸ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே ரகசிய தகவல் பரிமாற்றத்தை சக்திகாந்த தாஸ்தான் கவனித்து வருகிறார்.
இவ்வளவு இருந்தும், பி.ஜே.பியின் முக்கிய தலைவரான சுப்ரமணியன் சுவாமியின் கோபப் பார்வைக்கு சக்தி காந்ததாஸ் தப்பவில்லை. அவர் டார்க்கெட் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறவர் சக்தி காந்த தாஸ். ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம்.. இந்த இருவருக்கும் அடுத்து மூன்றாவது நபராக சுவாமியின் டார்க்கெட்டில் சக்தி காந்ததாஸ் இருக்கிறார்.
2016-ம் வருடம் ஜூன் மாதம் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், சக்தி காந்ததாஸை தாக்கி சில கருத்துகளை பதியவிட்டிருந்தார். சென்னை அடுத்த மகாபலிபுரம் கானத்தூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய நில விவகாரத்தில் சக்தி காந்ததாஸுக்கு தொடர்பு உண்டு என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக நிருபர்கள் சுவாமியிடம் விளக்கம் கேட்டபோது, ‘சமயம் வரும்போது ரகசியங்களை வெளியிடுவேன்’ என்று மட்டும் சொன்னார். அது என்ன ரகசியமோ?