போபால்: மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய 35 கி.மீ தூரம் கட்டிலில் அவரது தந்தை சுமந்து கொண்டு நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் கடாய் கிராமத்தை சேர்ந்தவர் திராபதி சிங் கோந்த். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி தற்கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் கோந்துவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
அது முடிந்தவுடன்தான் அந்த பெண்ணுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்ய வேண்டும். எனவே மகளின் உடலை சிங்ராலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறிவிட்டு சென்றனர்.
உணவுக்கு வழியில்லை
ஏழை தொழிலாளியான கோந்த், உணவுக்கே வழியில்லாத நிலையில் வாடகை வாகனத்தை அமர்த்தி உடலை கொண்டு செல்லும் நிலையில் அவர் இல்லை. இதனால் அதிகாரிகளிடம் உதவி கேட்டார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
இதையடுத்து பெண்ணுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமே என்பதால் கோந்து தனது மகளின் சடலத்தை கட்டிலில் கிடத்தினார். பின்னர் ஒரு கம்பால் தொட்டில் போல கட்டி அந்த கட்டிலை சுமந்து கொண்டு நடந்தே சென்றார்.
35 கிலோமீட்டர்
செல்லும் வழியில் மக்கள் சிறிது தூரம் தூக்கி கொண்டு வந்தனர். பின்னர் தொடர்ந்து 7 மணி நேரமாக நடந்தே சென்று சிங்ராலி மருத்துவமனையை அடைந்தார் கோந்த்.
இந்த சம்பவம் வைரலானது. இதுகுறித்து கோந்த் கூறுகையில் காலையில் 9 மணிக்கு நடக்க தொடங்கினோம், மாலை 4 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தோம்.
A man was forced to carry his daughter’s body on a cot for post-mortem for 35 km, walking for almost seven hours to reach the hospital in Singrauli @ndtv @ndtvindia pic.twitter.com/cNMYsWVzNh
— Anurag Dwary (@Anurag_Dwary) May 9, 2021
வாகன ஏற்பாடு
எங்கள் தோளில் கட்டிலுடன் உடலை சுமந்து வந்ததில் எங்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நினைத்திருந்தால் எனக்கு வாகனத்தை ஏற்படுத்தி தந்திருக்கலாம் என்றார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அருண் சிங் கூறுகையில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல காவல் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. எனவே வாகனத்திற்கு ஏற்பாடு செய்வது என்பது இயலாத காரியம் என்றார்.