அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் பெண் கைதியொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
52 வயதான லிசா மாண்ட்கோமெரி என்ற குறித்த குற்றவாளிக்கு புதன்கிழமை அதிகாலை 1.31 மணியளவில் இன்டியானாவின் டெர்ரே ஹாட்டில் உள்ள பெடரல் சிறை வளாகத்தில் விஷ ஊசி ஏற்றி நீதிமன்ற உத்தரவின் கீழ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
2004 ஆம் ஆண்டில் மாண்ட்கோமெரி கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் மிகவும் கொடூரமானது. மிசோரியைச் (Missouri) சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த லிசா, அப்பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து, அதை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையிலேயே அவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 1953 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக தற்சமயம் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.