ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். இவர்களை அழிக்க ஈராக்கில் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா நேற்று முதல் சிரியாவிலும் தனது தாக்குதலை தொடங்கியது.
இங்கு தன்னுடன் அரபு கூட்டாளி நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்து கொண்டு தீவிரவாதிகள் மீது குண்டு மழை பொழிந்தது. மேலும், ‘டோமஹாக்’ என்ற சக்தி வாய்ந்த எவுகணைகளும் வீசப்பட்டன.
‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகளின் தலைநகராக கருதப்படும் ரக்கா மற்றும் டெயர் அல் ஜோர், ஹசகா நகரங்களில் தீவிரவாதிகளின் நிலை மீது குண்டுகள் வீசப்பட்டன.
அதில், 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் 70 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிழக்கு சிரியாவில் முகாமிட்டிருக்கும் 50 அல் கொய்தா தீவிரவாதிகளும் அடங்குவர். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் தவிர பொது மக்களில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே இந்த தாக்குதல் மிகவும் வெற்றி கரமாக நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் மற்றும் அவர்களது பயிற்சி வளாகங்கள், தலைமையகங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள், ஆயுத வாகனங்கள், நிதி மையம் போன்ற அனைத்து நிலைகளும் தாக்கி தகர்த்து அழிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
தற்போது தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டும் இந்த தாக்குதலை தனியாக நடத்தவில்லை. சவுதி அரேபியா, ஜோர்டான், பக்ரைன், கத்தார் ஆகிய அரபு நட்பு நாடுகளுடன் இணைந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அந்த நாடுகளுடன் தோளோடு தோள் இணைந்து செயல்பட்டதில் அமெரிக்கா பெருமைபடுகிறது” என்றார்.