ஆமையும் முயலும் : நிலவுப் பயணப் போட்டியில் அமெரிக்காவை சீனா முந்துமா?
நாசா (Nasa) நான்கு விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி வரச் செய்ததை கடந்த மாத தொடக்கத்தில் உலகம் கவனித்தது. ஆனால், நிலவின் மேற்பரப்பில் உண்மையாகவே தரை இறங்குவதற்கு அமெரிக்கா மீண்டும் ஒரு விண்வெளிப் போட்டியில் இறங்கியுள்ளது. சீனாவுடன்தான் இம்முறை அந்தப் போட்டி. அதில் சீனா வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.
இரு நாடுகளும் நிலவில் மனிதர்கள் வசிக்கக்கூடிய தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. - இது மற்றொரு கிரகத்தில் அமையும் முதல் குடியேற்றமாக இருக்கும். அத்துடன் அரிய வளங்களைத் தேடுவதும் செவ்வாய்க்கிரகத்திற்கான எதிர்கால மனிதப் பயணங்களுக்கான தொழில்நுட்பங்களை ஆழமான விண்வெளிச் சூழலில் சோதிப்பதையும் அவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
நன்கு நிதி வசதி கொண்ட சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) , அமெரிக்கா வின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்துடன் (NASA) போட்டியிடுகிறது.
அப்பலோ திட்டத்தின் மூலம் ஏற்கனவே நிலவில் தரையிறங்கிய அனுபவமும் நிறுவன ரீதியான அறிவும் நாசாவுக்குச் சாதகமாக இருந்தாலும், 1960 களில் இருந்த தேசிய பட்ஜட் ஒதுக்கீட்டில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டு மீண்டும் நிலவுக்குச் செல்ல அது முயற்சிக்கிறது.
மேலும், அமெரிக்க விண்வெளி முகாமையானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் மாறும் அரசாங்க மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ளது. இது தசாப்த காலத் திட்டங்களைத் தடையின்றித் தொடர்வதைக் கடினமாக்குகிறது.
ஆனால், ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் சீனாவில் பணிபுரியும் ரொக்கெட் பொறியியலாளர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் இல்லை.
வேகமாக முன்னேறுவதற்காக, நிலவில் இறங்கும் விண்கலங்களை வடிவமைக்கும் முக்கியப் பணிகளை நாசா தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது.
இதில் வளர்ந்து வரும் விண்வெளிப் பொருளாதாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் கோடீஸ்வரர்களின் நிறுவனங்களும் அடங்கும்.
இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX)மற்றும் ஜெஃப் பெசோஸின் புளூ ஒரிஜின் (Blue Origin) ஆகிய இரண்டு நிறுவனங்களும் அடுத்த ஆண்டு சோதனை ஓட்டங்களை நடத்துவதற்காக நிலவில் இறங்கும் வாகனங்களை வடிவமைப்பதில் மும்முரமாக உள்ளன.
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிய பழைய நிலவுப் போட்டியைப் போன்று இல்லாமல், 21ஆம் நூற்றாண்டின் இந்தப் போட்டி ஒரு மரதன் ஓட்டத்தைப் போன்றது. இது பல ஆண்டுகளில் பல விண்கலங்களை ஏவும் பிரம்மாண்டமான முயற்சியாகும்.
ஸ்கொட்லாந்து வானியற்பியல் வல்லுநரும் ரொக்கெட் பொறியியல் நிபுணருமான ஸ்காட் மேன்லி இது குறித்துக் கூறுகையில்,
"யார் அடுத்ததாக நிலவுக்குச் செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அடுத்த 10 முறை யார் நிலவுக்குச் செல்கிறார்கள் என்பதே முக்கியம்.
தொடர்ந்து பயணங்களை மேற்கொள்ளும் நாடே உண்மையான வெற்றியைப் பெறப் போகிறது. விண்வெளியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டப்போகிறது. அதுவே மிக முக்கியமானது" என்றார்.
விண்வெளி என்பது தெளிவற்ற சட்டக் கருத்தொருமிப்பைக் கொண்ட ஒரு பகுதியாக இருப்பதால், வளங்கள் நிறைந்த நிலவின் மேற்பரப்பில் முதலில் காலடி எடுத்து வைக்கும் நாடு, அதற்கான விதிகளை வகுப்பதில் முன்னிலை வகிக்கும்.
இருந்தபோதிலும், நிலவுக்குச் சென்று திரும்பும் முதல் மனிதப் பயணம் என்பது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஒரு வலிமையான அடையாள வெற்றியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டித்தன்மையை நாசா தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது. ஏனெனில், இத்தகைய அவசர நிலையை உருவாக்குவதன் மூலமே காங்கிரஸிடமிருந்து அதற்கான நிதியைப் பெற முடியும் என்பதில் நாசா ஆர்வமாக உள்ளது.
"விண்வெளியின் உயர்மட்டப் பகுதியை அடைவதில் உலகளாவிய அதிகாரப் போட்டி நிலவுகிறது" என்று தெரிவித்த நாசாவின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன், "போட்டி என்று வரும்போது, யாரும் தோற்க விரும்புவதில்லை" என்றும் கூறினார்.
இது ஒரு கடுமையான போட்டியாகும். நாசா 2028 ஆம் ஆண்டில் நிலவில் இறங்கத் திட்டமிட்டுள்ளது (இருப்பினும் இது தாமதமாகவும் வாய்ப்புள்ளது), சீனா 2030 ஆம் ஆண்டுக்குள் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளது
(ஆனால், இது அதற்கு முன்பே நடக்கக்கூடும்). "வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம் வருடங்களில் அல்ல, மாதங்களிலேயே இருக்கும்" என்கிறார் ஐசக்மேன்.
சீனாவின் மனித விண்வெளிப் பயணம் 1990களில் தொடங்கப்பட்டிருந்தாலும், கடந்த 25 ஆண்டுகளில் அது பெரும் வேகமெடுத்துள்ளது.
மேலும், இத்திட்டம் அந்நாட்டு இராணுவம் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
சீனா இதுவரை அதன் ஒரு விண்வெளி வீரரை பூமியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு அப்பால் அனுப்பவில்லை என்றாலும், பெய்ஜிங் ஏற்கனவே தனது சொந்த விண்வெளி நிலையத்தைக் கொண்டுள்ளது.
மேலும், நாசாவைப் போலன்றி, சீனா தான் நிர்ணயித்த காலக்கெடுவைச் சரியாகப் பின்பற்றுவதில் கவனத்தை ஈர்க்கக்கூடிய சாதனையைப் படைத்துள்ளது.
"அவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்தால், அந்தத் திகதியில் அதைச் செய்து முடிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்" என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மேன்லி.
"விண்வெளித் திறன்களில் ரஷ்யாவை கிட்டத்தட்ட அனைத்து வழிகளிலும் சீனா விஞ்சிவிட்டது" என்று கூறிய அவர், சீனா இப்போது "மிகவும் நிதானமான, ஆனால், அதே சமயம் வேகம் குறையாத விண்வெளித் திட்டத்தை" செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜேம்ஸ் லூயிஸ் காங்கிரஸின் நிலைக்குழு ஒன்றில் சாட்சியமளித்தபோது, சோவியத் யூனியனுக்கு எதிரான நிலவுப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்கா "விண்வெளியில் பெரும்பாலும் ஆர்வத்தை இழந்துவிட்டது, அதேசமயம் சீனா தனது திட்டத்தைத் தீவிரப்படுத்தியது" என்று குறிப்பிட்டார்.
"
நிதானமாகச் செயல்படும் சீனா, அமெரிக்காவைக் கடந்து செல்லும் ஆமை-–முயல் கதையைப் போன்ற சூழலை நாம் விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில், நாசா தனது மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இதற்கு கிரேக்க நிலவுக் கடவுளின் பெயரான 'ஆர்டெமிஸ்' (Artemis) என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதன் உச்சக்கட்டமாக, 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவின் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் மனிதப் பயணம் கடந்த மாதம் வெற்றிகரமாக அமைந்தது.
அதே வேளையில், தனது நிலவு ஆய்வுத் திட்டங்களுக்கு நிலவுக் கடவுளின் பெயரான 'சாங் ஈ' (Chang’e) என்று பெயரிட்டுள்ள சீனா, அமெரிக்காவுக்கு இணையாக முன்னேறுவதில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது.
2024ஆம் ஆண்டில், சாங் ஈ-6 விண்கலம் மூலம் நிலவின் மறைவான பகுதியிலிருந்து (Far side) மாதிரிகளைச் சேகரித்த முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு அவசியமான நீர் பனிக்கட்டியைத் தேடி, சாங் ஈ-7 விண்கலம் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
"ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன," என்று சோங்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியரும், சீனாவின் விண்வெளித் திட்டத்தின் முக்கிய விஞ்ஞானியுமான கிசீ கெங்சின் (Xie Gengxin) தெரிவித்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டில் நிலவில் முதன்முதலாக ஒரு பச்சை இலையை வளரச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க பரிசோதனையை முன்னின்று நடத்தியவர்.
இவரது மற்றொரு சோதனையில் விண்வெளியில் ஒரு பட்டாம்பூச்சி முட்டையிலிருந்து வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
சீனா தனது விண்வெளி வீரர்களுக்கான உபகரணங்களைத் தொடர்ந்து சோதித்து வருகிறது. லாங் மார்ச்-10 ரொக்கெட் மூலம் மெங்சோ (Mengzhou) எனப்படும் 'கனவுப் படகு' விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவர்.
பின்னர், லான்யு (Lanyue) எனப்படும் ஒன்பது மீற்றர் நிலவு இறங்கு கலம் (Lander), இருவரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும். அங்கு அவர்கள் வாங்யு (Wangyu) எனப்படும் புதிய விண்வெளி உடைகளை அணிந்து நிலவின் கரடுமுரடான பகுதிகளில் ஆய்வு செய்வர். இந்த உடை விண்வெளி வீரர்கள் எளிதாகக் குனிந்து வேலை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்காவில், ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஒரிஜின் நிறுவனங்கள் நாசாவிற்கான தங்களது நிலவு இறங்கு கலன்களை உருவாக்குவதில் போட்டியிட்டு வருகின்றன.
புளூ ஒரிஜின் 2026 ஆம் ஆண்டில் தனது 'புளூ மூன்' கலனைச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 52 மீற்றர் உயரமான பிரம்மாண்ட இறங்கு கலம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த இரு நிறுவனங்களின் கலன்களும் இன்னும் முழுமையடையாதது நாசாவின் காலக்கெடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிலவு என்பது அந்தார்டிக்காவைப் போல இராணுவ நடவடிக்கைகள் மற்றும் சுரங்கத் தொழில்கள் இல்லாத, அறிவியலுக்காக மட்டும் பயன்படும் ஒரு பொதுவான இடமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
இருப்பினும், வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2011 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அமெரிக்கச் சட்டத்தின்படி, நாசா சீன விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீனா தனது விண்வெளித் திட்டத்தை அமெரிக்காவுடனான போட்டியாகப் பார்க்காமல், தனது உள்நாட்டு இலக்குகளை அடைவதிலேயே கவனம் செலுத்துகிறது.
"அமெரிக்காவை முழுமையாக முந்துவது எங்கள் இலக்கல்ல, அது யதார்த்தமும் அல்ல, அதற்கான அவசியமும் இல்லை," என்று பேராசிரியர் கிசீ கூறுகிறார். அதே சமயம், நிலவில் மனிதர்களை இறக்குவது நாட்டுக்கு ஒரு பெருமிதத்தைத் தரும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்கா தடை விதித்தாலும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் இத்தாலி, பிரான்ஸ், சுவீடன் போன்ற நாடுகள் சீனாவின் சாங் ஈ-6 திட்டத்தில் இணைந்து செயற்பட்டன.
பிரான்ஸின் விண்வெளி ஆராய்ச்சியாளர் பியர்-யவ்ஸ் மெஸ்லின் (Pierre-Yves Meslin) கூறுகையில், "ஐரோப்பியர்களாகிய எங்களிடம் நிலவுக்குச் செல்லத் தேவையான கருவிகள் இல்லை.
எனவே நாங்கள் அமெரிக்கா அல்லது சீனாவைச் சார்ந்து இருக்கிறோம். இப்போது சீனா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது" என்றார்.
சீனாவின் விண்வெளித் திட்டம் மிகவும் தெளிவானதும் முறையானதுமாகும் என்று அவர் பாராட்டுகிறார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் விண்வெளி மாநாடுகளில் சீன விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது, ஆனால் இப்போது சீன இளைஞர்கள் பெருமளவில் அதில் பங்கேற்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"அவர்கள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை நிச்சயம் செய்தே முடிப்பார்கள்" என்று சீனாவின் உறுதிப்பாட்டை அவர் மெச்சுகறார்.
-சுபத்திரா-
(ஒலிவர் ஹோம்ஸ், த கார்டியன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!