ஓடும் டாக்சியிலிருந்து குதித்த பெண்ணால் பரபரப்பு- வீடியோ
ஓட்டுநரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சியே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
மலேசியாவில் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் வாகனம் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோதே, அந்தப் பெண் திடீரென காரின் கதவைத் திறந்து சாலையில் குதிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சாலையில் குதித்த வேகத்தில் அவரின் கைத்தொலைபேசி, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் நெடுஞ்சாலையில் சிதறி விழுந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள், அந்தப் பெண் மீது மோதாமல் இருக்கத் தங்களின் வாகனங்களை அவசரமாக நிறுத்தினர்.
இந்தச் சம்பவம் மே 1 ஆம் திகதி காலை நடந்துள்ளதாக ‘தி சன்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "பயணத்தின்போது ஓட்டுநர் எவ்விதக் காரணமும் இன்றி, பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடியின் வழியாகத் தன்னைத் திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததாக" அந்தப் பெண் பின்னர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஓட்டுநரின் இந்தச் செயலால் அவர் கடும் பீதியடைந்துள்ளார்.
இது குறித்து வடக்கு கிள்ளான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் விஜய ராவ் கூறுகையில், "பயணியின் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியதால், அவர் வாகனத்திலிருந்து கீழே குதிக்க முடிவு செய்துள்ளார்.
சாலையில் விழுந்ததில் அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கீழே குதித்தவுடன், 47 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்" என்றார்.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காட்சிகளின்படி, காலணிகள் இன்றி வெறும் காலுடன் இருக்கும் அந்தப் பெண், காரைத் தொடர்ந்து ஓடுவதையும், பின்னர் அதே காரில் இருந்து இறங்கிய மற்றொரு பயணியை அணுகுவதையும் காண முடிகிறது. அப்போது அந்த வழியால் சென்ற வாகன ஓட்டி ஒருவர், அவருக்கு உதவ முன்வந்து சிகிச்சைக்காக அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு ஓட்டுநர் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அந்தப் பெண்ணைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநரின் தரப்பில் ஏதேனும் தவறு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், உயிருக்கு அல்லது தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள் தொடர்பான மலேசியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Moment woman leaps out of taxi onto busy road after driver ‘looked at her' pic.twitter.com/fba4Zo2xRJ
— The Sun (@TheSun) May 5, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!