news@ilakkiyainfo.com

பிரிவுகள்

'நாளைக்கு வா என்றவர்; நாய் கூண்டில்'

25 Mar, 2026
கற்பிட்டி, நுரைச்சோலை - மாம்புரிப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரை வெள்ளை நிற காரில் கடத்தி சென்று, நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலொன்றை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். கடந்த 23ஆம் திகதி லுணுவில, வென்னப்புவ மற்றும் பண்டிரிப்புவ ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டதுடன் பிரதான சந்தேக நபர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர் மேசன் தொழிலாளி என்றும், அவரது மனைவி கூலி வேலை செய்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேக நபரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தவறியமையே இந்த கடத்தலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடனை திருப்பி செலுத்தும் வரை குறித்த கும்பல் அவரை பண்டிரிப்புவ பகுதியில் உள்ள வீடொன்றில் நாய் கூண்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. கடந்த 23ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில், குறித்த தொழிலாளி தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த போது, அங்கிருந்த கும்பல் அவரை பலவந்தமாக வெள்ளை நிற காரில் கடத்தி சென்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். மீட்கப்பட்ட நபர் பல மணி நேரம் உணவு மற்றும் நீரின்றி நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் ஆலோசனையின் கீழ், சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் பெரேரா மற்றும் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசேல புவஞ்ச ஆகியோரின் வழிநடத்தலில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் லுணுவில பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments

Write the comments...............