நாட்டின் நவீன சட்ட வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக அதிர்ச்சிகரமான, அதேவேளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தங்களுக்கு முன்கூட்டியே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், தங்களின் கடமையை நிறைவேற்றத்தவறி, அதன் மூலம் 268 அப்பாவிப் பொதுமக்களின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரலாற்றில், பொலிஸ் துறையின் உச்சப் பதவியான பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கோ அல்லது பாதுகாப்புத்துறையின் தலைமையான பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கோ மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அத்துடன் 586 பேரின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமைக்கான 586 குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார், இதன் பின்னணியில் இருந்த அரசியல் சதிகள் என்ன என்பன போன்ற பல முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாத சூழலில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் சட்டப்பூர்வமாக எஞ்சியிருந்தாலும், இந்தத் தீர்ப்பானது இலங்கைப் பொலிஸ் துறையின் கட்டமைப்புச் சிதைவையும், அதன் தலைமைத்துவ வீழ்ச்சியையும் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
இலங்கைப் பொலிஸ் சேவையின் அண்மைய வரலாற்றை ஆராய்ந்தால், அதன் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்த பின்னடைவுகளும் வீழ்ச்சிகளும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பூஜித் ஜயசுந்தர
நாட்டின் 34 ஆவது பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தர, கடமை தவறிய மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக மரண தண்டனைக் கைதியாகச் சிறைக்கு அனுப்பட்டுள்ளார்.
இவருக்குப் பின்னராக 35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவியை ஏற்றிருந்த சி.டி. விக்ரமரத்ன, தனது ஓய்வுகாலத்தில் காலத்தில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் தற்கொலைச் சம்பவம், பொலிஸ் துறையின் உயர்மட்டத்தில் நிலவும் மன உளைச்சலையும், அரசியல்மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பின் பின்னணியில் நிலவும் கடுமையான அழுத்தங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
அவருக்குப் அடுத்தபடியாக, 36 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் கதையோ முற்றிலும் வேறுவிதமானது. அவர் மீது அடிப்படை மனித உரிமை மீறல்கள், சட்டவிரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்தமை, குற்றவியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் எனப் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றமே அவர் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. நாட்டின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தலைமைப் பொறுப்பில் இருந்த தொடர்ச்சியான மூன்று பொலிஸ் மா அதிபர்களின் இந்த மோசமான நிலை, தனிப்பட்ட அதிகாரிகளின் தவறுகளால் மட்டும் ஏற்பட்டதல்ல. மாறாக, இலங்கை பொலிஸ் அமைப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்புச் சீரழிவையே பிரதிபலிக்கிறது.
இலங்கைப் பொலிஸ் துறை என்பது வெறுமனே உயர்மட்டத் தலைவர்களின் தவறுகளால் மட்டும் சீரழியவில்லை. அதன் கீழ்மட்டம் வரை பரவியுள்ள ஊழல், இலஞ்சம், பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேக நபர்களைக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து கொல்வது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் பொலிஸ் துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டன.
வீதிப் போக்குவரத்துச் சோதனைகள் முதல் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்கள் வரை பொலிஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.
பொலிஸ் நிலையங்களுக்குப் முறைப்பாடு அளிக்க வரும் பெண்களிடம் தவறாக நடப்பது, காவலில் உள்ள பெண்களைச் சுரண்டுவது மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாலியல் அச்சுறுத்தல்களை விடுப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தகவல்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.
இதனைவிடவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பதும், 'ஆயுதங்களைக் காட்டச் சென்றபோது சுடப்பட்டார்கள்' என்ற ஒரே மாதிரியான போலித்தனமான நியாயங்கள் கற்பிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டன. இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்களின் பட்டியல் நீண்டமையால் அது இலங்கையை சர்வதேச அரங்கிலும் தலைகுனிய வைத்துள்ளது.
இலங்கையைப் போன்றே உலகெங்கிலும் பொலிஸ் அதிகார துஷ்பிரயோகங்களும், கடமை தவறல்களும் பெரும் சமூகப் புரட்சிகளுக்கும் சட்டப்பூர்வமான சீர்திருத்தங்களுக்கும் வழிவகுத்துள்ளன.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் ஜோர்ஜ் புளொய்ட் படுகொலையானது சமூகப் புரட்சியை தோற்றுவித்தது. அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பினத்தவர் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதையும் உலுக்கிய 'Black Lives Matter' இயக்கத்துக்கு வித்திட்டது.
இதன் விளைவாக அமெரிக்கப் பொலிஸ் அமைப்பில் நிதியைக் குறைத்தல், சுயாதீனக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்தல் மற்றும் பொலிஸாரின் கொடூரத்துக்கு எதிராகப் பல்வேறு சட்டச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரித்தானியாவின் லண்டனில் சாரா எவரார்ட் என்ற பெண், கடமையில் இருந்த பெருநகர பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பிரித்தானியப் பொலிஸ்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. இதன் விளைவாக பொலிஸ் அதிகாரிகளின் குற்றப்பின்னணிகளை மீண்டும் ஆய்வு செய்யும் தீவிர உள்ளக விசாரணை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தென் ஆபிரிக்காவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 34 சுரங்கத் தொழிலாளர்களைப் பொலிஸார் சுட்டுக்கொன்ற 'மரிகானா சம்பவம்', அந்நாட்டுப் பொலிஸ்துறையின் கறைபடிந்த வரலாறாக மாறியது. இது பொலிஸ் துறையை முழுமையாக மறுசீரமைக்கவும், 'சுயாதீன பொலிஸ் புகார் விசாரணை இயக்கத்தை' வலுப்படுத்தவும் காரணமானது.
உலகளாவிய இந்த உதாரணங்கள் உணர்த்துவது என்னவெனில், பொலிஸ் துறை என்பது மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை அச்சுறுத்தும் அல்லது அரசின் அரசியல் தேவைகளுக்காகச் செயல்படும் அடக்குமுறைக் கருவியாக மாறக்கூடாது என்பதாகும்.
இலங்கைப் பொலிஸ் சேவையானது 1866 ஆம் ஆண்டின் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையிலேயே இன்னமும் பிரதானமாக இயங்கி வருகிறது. காலனித்துவ ஆட்சிக்காலத்தில் மக்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், ஒரு ஜனநாயக நாட்டின் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை.
இதனாலேயே, இலங்கையில் நவீன, சுயாதீனமான மற்றும் மக்களுக்கான தேசிய பொலிஸ் கொள்கை (National Police Policy)உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசியலமைப்பு வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய பொலிஸ் கொள்கையானது பின்வரும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்:
முதலாவதாக, பொலிஸ் அதிகாரிகளின் நியமனங்கள், இடமாற்றங்கள், தரவுயர்வுகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை முற்றாக ஒழித்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முழுமையான சுயாதீன அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இரண்டாவதாக, பொலிஸ் பயிற்சிகளில் மனித உரிமைகள், சித்திரவதைகளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் நவீன குற்றவியல் விசாரணை முறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வரும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு சுயாதீனமான பொலிஸ் விசாரணை கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நான்காவதாக, பொலிஸாரைக் கண்டால் பொதுமக்கள் அச்சப்படும் சூழலை மாற்றி, பொதுமக்களோடு இணைந்து குற்றங்களைத் தடுக்கும் சமூகப் பொலிஸ் முறையை வலுப்படுத்த வேண்டும்.
இந்த சீர்திருத்தங்கள் அவசியமானவையாக ஒருபுறமிருக்கையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு, எவ்வளவு பெரிய உயர்பதவியில் இருப்பவர்களானாலும் தங்களின் கடமையிலிருந்து தவறினால் அல்லது நாட்டின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதற்கான வலுவான எச்சரிக்கையாகும்.
இருப்பினும், வெறுமனே தனிநபர்களுக்குத் தண்டனை வழங்குவதோடு அரசு தனது கடமையை முடித்துக் கொள்ளக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும் அரசியலமைப்புச் சதிகளையும் கண்டறிந்து வெளிக்கொணர்வது அரசின் தலையாய கடமையாகும்.
அதேநேரம், இலங்கை பொலிஸ் துறை என்பது ஆட்சியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரணாக இல்லாமல், சட்டத்தின் ஆட்சியையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் உண்மையான மக்கள் சேவையாக மாறும்போது மட்டுமே, இத்தகைய தேசியப் பேரழிவுகளை எதிர்காலத்திலாவது தடுக்க முடியும்.
ஆர்.ராம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!