பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தின் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் அந்த நாட்டில் 1,045 பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 1,139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் பாகிஸ்தானில் பதிவான மிக உயர்ந்த உயிரிழப்பு வீதமாகும். சர்வதேச அரங்கில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான், இன்று தனது சொந்த எல்லைகளுக்குள் ஒரு பெரிய மற்றும் முடிவில்லாத உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிப்பது பெரும் முரணாகப் பார்க்கப்படுகிறது.South Asians & Diaspora
இந்த வன்முறைகளின் முக்கிய காரணியாக, 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக உருவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்புகளின் கூட்டணி மீண்டும் வலுப்பெற்றுள்ளது விளங்குகிறது.
கடந்த கால உயிரிழப்புகளில் பாதிக்கும் மேலானவற்றிற்கு இந்த அமைப்பே பொறுப்பாகும். கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 521 உள்நாட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இதில் 358 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். தற்போது இந்த வன்முறைகள் பெரும்பாலும் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களிலேயே தீவிரமாக அரங்கேறி வருகின்றன.

பாகிஸ்தான் நாடு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய நான்கு முக்கிய மாகாணங்களைக் கொண்டிருந்தாலும், விமர்சகர்களும் உள்ளூர் மக்களும் இந்த நாட்டை
'பஞ்சாபிஸ்தான்' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு காரணம், நாட்டின் மீதான பஞ்சாப் மாகாணத்தின் முழுமையான ஆதிக்கமே ஆகும். பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் பஞ்சாப் வெறும் 26 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், அது நாட்டின் 51 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளதுடன், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை வாரி வழங்குகிறது.
இந்த பொருளாதார பலம் நேரடியாக அரசியல் அதிகாரமாக மாறுகிறது. நாட்டின் பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 173 இடங்களை (51.5 சதவீதம்) பஞ்சாப் மாகாணம் மட்டுமே தனித்து வைத்துள்ளது.
இராணுவம் மற்றும் அரசு நிர்வாகம் முதல் பொருளாதாரம் மற்றும் கிரிக்கெட் அணி வரை பஞ்சாபியர்களே பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த மத்தியமயமாக்கப்பட்ட கட்டுப்பாடு மற்ற மாகாணங்களை முற்றிலும் ஓரங்கட்டப்பட்ட உணர்வுக்கு தள்ளியுள்ளதுடன், சமமற்ற வளப் பகிர்வு மற்றும் மாகாண சுயாட்சி இல்லாமை ஆகியவற்றால் நாடு முழுவதும் இன மற்றும் தேசியவாதக் கிளர்ச்சிகளைத் தூண்டியுள்ளது.

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் கொதிநிலை
பலுசிஸ்தானில் நிலவும் மோதலானது பாகிஸ்தான் உருவான அடுத்த ஆண்டான 1948 முதல் தொடங்கும் பழமையான ஒன்றாகும். இஸ்லாமாபாத் தங்களது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டதாகக் கூறும் பலுச் மக்கள், தங்களுக்கு தனி சுதந்திரம், இயற்கை வளங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் தங்களின் தனித்துவமான கலாசாரப் பாதுகாப்பு ஆகியவற்றை பல தசாப்தங்களாகக் கோரி வருகின்றனர்.
பலுசிஸ்தான் 44 சதவீத நிலப்பரப்பைக் கொண்டிருந்தாலும், பாராளுமன்றத்தில் அதற்கு வெறும் 20 இடங்கள் (6 சதவீதம்) மட்டுமே உள்ளன. இயற்கை எரிவாயு, நிலக்கரி, தாமிரம் மற்றும் தங்கம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த மாகாணமாகவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் முக்கிய மையமாகவும் இது இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும்.
இங்குள்ள மக்களில் 70 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். சீனப் பெருந்திட்டங்கள் போன்ற வெளிநாட்டு முதலீடுகள் பஞ்சாபி உயரடுக்கினருக்கு சேவை செய்ய தங்களின் வளங்களைச் சுரண்டுவதாக உள்ளுர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழுக்கள் அங்கு வலுப்பெற்றுள்ளன. சுமார் 6,000 போராளிகளைக் கொண்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜூலை 2026இல் ஜியாரத்தில் உள்ள அணைத் திட்டத்தில் 27 பொலிஸார் உட்பட 42 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னர் மார்ச் 2025இல் 400க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட ரயில் ஒன்றையும் அவர்கள் கடத்தியிருந்தனர்.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம் 2001 அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு வன்முறையின் முக்கிய மையமாக மாறியுள்ளது.
2021இல் ஆப்கான் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து இங்கு வன்முறை கடுமையாக அதிகரித்துள்ளது. இங்கும் 48 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
டிடிபி, இஸ்கேபி மற்றும் ஹபீஸ் குல் பகதூர் குழு போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளால் இங்கு வன்முறை தூண்டப்படுகிறது. டிடிபி அமைப்பானது ஆப்கான் தலிபான்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதுடன், இஸ்லாமாபாத் நிர்வாகத்தை மாகாணத்திலிருந்து வெளியேற்றி ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டு டிசம்பரில் காரக்கில் நடந்த தாக்குதலில் ஐந்து பொலிசாரும், 2024 நவம்பரில் குர்ரம் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஷியாக்கள் உட்பட 42 பேரும் கொல்லப்பட்டனர்.Physics

சிந்து மாகாணத்தின் நீர் நெருக்கடி
சிந்து சமவெளி நாகரிகத்தின் வேர்களைக் கொண்ட சிந்து மாகாணம் இன்று 45 சதவீத வறுமையைக் கண்டுள்ளது. இதன் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம் (77 வீத விவசாய நிலங்கள்) தற்போது 62 சதவீத நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மோசமான நிர்வாகம் மற்றும் சிதைந்து வரும் உள்கட்டமைப்பு காரணமாக 40 சதவீதத்திற்கும் அதிகமான கால்வாய் நீர் ஆவியாதல் மற்றும் கசிவு மூலம் வீணாகிறது.
மேலும் 78 வீத நிலத்தடி நீரும் உவர்ப்புத் தன்மையாக மாறியுள்ளதால் மண் பாழாகிறது. கோடை காலத்தில் நிலவும் 42 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டின்படி, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.Astrology & Divination
2024 ஜூலை மாதத்தில் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்த 'ஆறு மூலோபாய கால்வாய்கள்' திட்டம் மாகாணங்களுக்கு இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது.
2025 பெப்ரவரியில் சோலிஸ்தான் கால்வாய் தொடங்கப்பட்டபோது, தங்களின் அத்தியாவசிய நீர் பஞ்சாபிற்கு திருப்பி விடப்படும் என்று அஞ்சி சிந்து மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பலத்த எதிர்ப்பால் 2025 ஆகஸ்டில் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், இதனால் ஏற்பட்ட கோபம் இன்னும் தணியவில்லை.
அதேபோல், வடக்கு எல்லையில் உள்ள கில்கித்-பல்டிஸ்தான் பிராந்தியம் 1947 முதல் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்கு முழுமையான அரசியலமைப்பு அந்தஸ்தோ அல்லது பாராளுமன்ற பிரதிநிதித்துவமோ இல்லை. இங்குள்ள மிகப்பெரிய நீர்மின்சாரம் மற்றும் கனிம வளங்களை மத்திய அரசு சுரண்டினாலும், உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பின்மை மற்றும் தொடர் மின்வெட்டுகளால் அவதிப்படுகின்றனர். 2025 பெப்ரவரியில் டயாமர்-பாஷா அணைக்கு எதிராக பலவாரிஸ்தான் தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளால் காரகோரம் நெடுஞ்சாலை முற்றுகையிடப்பட்டது.
தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் சீன நிறுவனங்களுக்கும் வெளிநபர்களுக்கும் நிலங்கள் மற்றும் சுரங்க குத்தகைகள் வழங்கப்பட்டதற்கு எதிராக உள்ளூர் மக்கள் தீவிர போராட்டங்களை நடத்தினர்.Geographic Reference
பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் அரசியல் புறக்கணிப்பு ஆகிய ஆழமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, இஸ்லாமாபாத் அரசு பெரும்பாலும் இராணுவ ஒடுக்குமுறைகளையே நம்பியுள்ளது. இதன் மிக மோசமான விளைவாக, தங்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகப் பேசும் செயற்பாட்டாளர்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2016 மற்றும் 2024க்கு இடையில் 10,500க்கும் மேற்பட்ட காணாமல்போன வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் சுயாதீன மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறுகின்றன. பலுச் பிரிவினைவாதிகள் மட்டும் கடந்த பல தசாப்தங்களாக தங்களின் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல்போயுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் தனது சொந்த மாகாணங்களை வெறும் வளங்களைச் சுரண்டும் காலனிகளாக நடத்துவதை நிறுத்திவிட்டு, உண்மையான அரசியல் உள்ளடக்கம் மற்றும் மனித உரிமைகளில் கவனம் செலுத்தாதவரை, பாகிஸ்தான் தனக்குத்தானே போரிட்டுக் கொள்ளும் ஒரு நாடாகவே நீடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!