இஸ்ரேல் இன்று உலகளாவிய மட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மக்கள் மத்தியில் அதிக அளவில் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது. அண்மைக்கால உலகளாவிய ரீதியிலான கருத்துக் கணிப்பொன்றின் மூலம் இது தெரிய வந்துள்ளது. ஒரு அறிக்கையின் படி 97.55 சதவீதமான உலக மக்கள் இஸ்ரேலை வெறுக்கின்றனர்.
இஸ்ரேலின் படுகொலைகள், இனப்படுகொலைகள், மற்றும் பலஸ்தீனர்களுக்கு எதிரான முடிவற்ற போர்க்குற்றங்கள், என்பனவற்றை மூடிமறைக்க அமெரிக்காவும் ஐரோப்பாவும் அரசியல், இராணுவம், பொருளாதாரம், நிதி மற்றும் ஊடகங்கள் வாயிலாக அதிகளவான ஆதரவை வழங்கிய போதிலும், சர்வதேச மட்டத்தில் அது மக்களது உணர்வுகளில் ஒரு வியக்கத்தக்க மாற்றத்தையே பிரதிபலிக்கின்றது.
மறுபுறத்தில், பல ஆய்வுகளின்படி, இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் பொது ஆதரவு வரலாற்றில் என்றுமில்லாத ஒரு சரிவைச் சந்தித்துள்ளது. இது பெரும்பாலும் தற்போது காஸாவில் நடந்து வரும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளால் உந்தப்பட்டது.
அண்மைக்கால ஆய்வுகள் பல, தற்போது அதிகமான அமெரிக்கர்கள் பலஸ்தீனர்கள் மீது அனுதாபப்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தி உள்ளன. இது பல தசாப்தங்களாக நீடித்து வந்த அமெரிக்கர்களின் வலுவான இஸ்ரேல் சார்பு உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது.
2026 மே 15 ஆம் திகதியிடப்பட்ட 'நியூ ஏஜ்' என்ற சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இஸ்ரேல் உலகின் மிகவும் விரும்பப்படாத நாடாக மாறியுள்ளது. காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகள், பலஸ்தீனர்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வுகள், பலஸ்தீன மக்களை பட்டினியால் வாட்டும் இஸ்ரேலின் காட்டுமிராண்டிக் கொள்கைகள், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகள் என்பவற்றுக்கு மத்தியில் இஸ்ரேலின் சர்வதேச ரீதியான தனிமைப்படுத்தல் தீவிரமாக ஆழமடைந்து வருவதை குறிக்கும் மற்றொரு அறிகுறியாக இது காணப்படுகின்றது.Holidays & Seasonal Events
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசால் சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள், ஐ.நா. நிபுணர்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியன எச்சரித்துள்ளதால் இஸ்ரேலின் உலகளாவிய பிம்பம் தற்போது மிக மோசமாக சரிந்துள்ளது.
அமெரிக்காவும் அதன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினதும் கடினமான கொள்கைகள் காரணமாக உலகளாவிய நிலையில், அமெரிக்கா பற்றிய மக்கள் அபிப்பிராயமும் வியத்தகு சரிவை சந்தித்துள்ளது.
காஸா மீதான தாக்குதல் தொடர்பான விடயத்தில் ஆக்கிரமிப்பு அரசுக்கு எதிராக உலகளாவிய பொதுக் கருத்து கடுமையாக மாறியுள்ள நிலையில், இஸ்ரேல் சம்பந்தமான மக்களின் நிலைப்பாட்டிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
2023 அக்டோபர் முதல், இஸ்ரேல் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது. காஸாவில் பொதுமக்களின் பெரும்பாலான உள் கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தொடரான நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முழு பலஸ்தீன மக்களையும் இடம்பெயர வைத்துள்ளது. மேலும் பல சந்தர்ப்பங்களில் ஐ. நா நிபுணர்களும், இனப் படுகொலைகள் பற்றிய அறிஞர்களும் ஆய்வாளர்களும் பலஸ்தீனில் இடம்பெற்ற சம்பவங்கள் மோசமான இனப் படுகொலைகள் என்றே வர்ணித்துள்ளனர்.
அத்தோடு ஐரோப்பிய தலைவர்களும் வியக்கத்தக்க விதத்தில் இஸ்ரேலிய வன்முறை மற்றும் கொள்கைகள் மீதான தங்கள் கண்டனத்தை தீவிரமாகக் கூர்மைப்படுத்தி உள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் “குளோபல் சுமுத்” மனிதாபிமான உதவி படகை இஸ்ரேலிய கடற்படை இடைமறித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடுமையான இராஜதந்திர விரிசலும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், தடுத்து வைக்கப்பட்டுள்ள உலகளாவிய ஆர்வலர்களை மண்டியிட கட்டாயப்படுத்தும் வீடியோ காட்சிகளை வெளியிட்டதை அடுத்து இந்த ஆத்திரம் அதிகரித்துள்ளது.
அண்மையில் நடந்த ஆழ்கடல் நிவாரணப் படகுகள் இடைமறிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் மீது கடும் கோபம் கொண்டுள்ளன. “ஃப்ளோட்டில்லா செயற்பாட்டாளர்கள்” என அழைக்கப்படும், இந்த நிவாரணப் படகு பயணிகள் தமக்கிடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், தண்ணீர் கூட வழங்கப்படாமல் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு தரையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் வெளியானதை அடுத்து இவ்வாறு கொடுமை படுத்தப்பட்ட மக்களது நாடுகளின் அதிகாரிகள் உட்பட பல உலகத் தலைவர்களிடமிருந்து பெரும் கண்டனங்களும் எழுந்துள்ளன.
ஃப்ளோட்டில்லா செயற்பாட்டாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு மூல காரணமான இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-க்விர், நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் ஒரு தலைப்பட்சமான பயணத் தடையை பிரான்ஸ் வெளியிட்டுள்ளது.
ஃப்ளோட்டில்லா ஆர்வலர்கள் நடத்தப்பட்ட விதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி வன்மையாகக் கண்டித்துள்ளார். இது மனித கண்ணியத்தை மீறும் ஒரு செயல் என்று அவர் கூறி உள்ளார்.
அதேவேளை, இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானி ஐரோப்பிய ஒன்றியம் பென்-கோவிர் மீது முழு அளவிலான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், இந்த நடத்தையை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கண்டித்தார். “இது சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் தொடர்ந்து புறக்கணித்து வருவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை சுட்டிக் காட்டுகின்றது” என்று குறிப்பிட்டார்,
மேலும் எதிர்வரும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் இந்த விடயம் பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் மற்றும் அவரின் அரசாங்கமும் ஐரோப்பாவில் இஸ்ரேலின் வலுவான விமர்சகர்களில் ஒருவராக மாறி உள்ளனர்.
காஸாவின் நிலைமையை ஒரு இனப் படுகொலை என்று இவர் அடிக்கடி குறிப்பிடுகின்றார். பலஸ்தீன அரசையும் ஸபெயின் முறையாக அங்கீகரித்துள்ளது. ஸ்பெயின் இஸ்ரேல் மீது முழு ஆயுதத் தடையையும் அமுல்படுத்தியுள்ளது
மற்றும் அதன் தூதுவரையும் திருப்பி அழைத்துள்ளது. காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக, 'யூரோவிஷன்' பாடல் போட்டியில் இருந்து இஸ்ரேலை தடை செய்யுமாறும் ஸ்பெயின் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய தலைமைக்கு கைது உத்தரவுகளை பிறப்பிப்பதில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ஐ. சி. சி) ஸ்பெயின் தீவிர ஆதரவளித்துள்ளது. மேலும் இஸ்ரேலுடனான தொடர்புகள் ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஸபெயின் வலியுறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஸ்பெயின் இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை அமல்படுத்தும் ஒரு விரிவான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. மேலும் ஸ்பானிய துறைமுகங்கள், மற்றும் வான்வெளி வழியாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்வதைத் தடை செய்தும் உள்ளது.
ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை சான்செஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். காஸாவில் செய்ததைப் போலவே லெபனானிலும் "அதே அளவிலான சேதத்தையும் அழிவையும்" ஏற்படுத்த இஸ்ரேல் முயலுகின்றது என்று அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டு நிர்வாக அமைப்புகள் இஸ்ரேலை உலகளாவிய நிகழ்வுகளில் போட்டியிட விடாமல் தடை செய்யுமாறு சான்செஸ் முறைப்படி கோரியுள்ளார். ரஷ்யாவைப் போலவே இஸ்ரேலும் தடைகளையும், விலக்குகளையும், எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவரின் வாதமாகும். இஸ்ரேல் இடம்பெற்றிருந்ததால், யூரோவிஷன் பாடல் போட்டியில் ஸ்பெயினின் ஒளிபரப்பு மற்றும் பங்கேற்பை அவரது நிர்வாகம் புறக்கணித்து விட்டது.
உலக அரசியல் அரங்கு முழுவதும், ஐரிஷ் அரசியல்வாதிகள் பலஸ்தீனில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும் விமர்சகர்களில் ஒரு பிரிவினராக உள்ளனர். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை காட்டுமிராண்டித்தனமானது,
அது இனப்படுகொலைகளில் ஈடுபடுகின்றது மற்றும் சர்வதேச சட்டங்களை தொடர்ந்து மீறுகின்றது என ஐரிஷ் அரசியல்வாதிகள் அடிக்கடி கண்டனம் செய்கின்றார்கள். இஸ்ரேல் மீதான உறுதியான ஐரோப்பிய பொறுப்புக்கூறல், மற்றும் பொருளாதாரத் தடைகளுக்காக அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
"பலஸ்தீன குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் எரிந்ததைப் போலவே, பெஞ்சமின் நெதன்யாஹு வும் நரகத்தில் எரிக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று ஒரு பாராளுமன்ற விவாதத்தின் போது, ஷின்பேன் கட்சியின் ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் தாமஸ் கோல்ட் கூறினார்.
அட்டூழியங்களை அனுபவித்த யூத மக்கள், காஸாவில் இதுபோன்ற மிருகத்தனமான செயல்களைச் செய்ய இஸ்ரேலிய அரசாங்கத்தை எவ்வாறு 'அனுமதிக்க' முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"உலகத்தின் முன், இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைப்பது எந்த வகையான ஆட்சியாக இருக்க முடியும்? இனப்படுகொலை சம்பந்தமாக குற்றம் சாட்டப்படும் போதெல்லாம் இஸ்ரேல் அதை தொடரவே விரும்புகின்றது" என்று பாராமன்றத்தில் உரையாற்றும் போது கூறிய அயர்லாந்து அரசியல்வாதி ரிச்சர்ட் பாய்ட் பாரெட், ரஃபாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார்.
பலஸ்தீனர்களுடனான பல தசாப்த கால மோதல்களின் விளைவாக 24 இற்கு மேற்பட்ட ஐ. நா. உறுப்பு நாடுகள், குறிப்பாக அரபு லீக் மற்றும் பரவலாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) என்பனவற்றின் எதிர்ப்பு மற்றும் நிராகரிப்பு என்பனவற்றால் இஸ்ரேலின் உலகளாவிய பிம்பம் கணிசமாகச் சரிந்துள்ளது.
மனித உரிமைகள் அமைப்புகள், ஐ.நா நிபுணர்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்கள் என்பன ஆக்கிரமிப்பு அரசு சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறி வருவதாக எச்சரித்துள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எது எப்படி இருந்த போதும், மாறிவரும் கருத்துக்கள் மற்றும் வளர்ந்து வரும் பொது மக்கள் எதிர்ப்புகள் என்பன கணிசமாக இருந்தபோதிலும், மேலைத்தேச அரசாங்கங்கள் குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேலுடன் தங்கள் மூலோபாய, நிதி மற்றும் இராஜதந்திர கூட்டணிகளை பெரும்பாலும் தொடர்ந்து பேணி வருகின்றன. காஸாவில் அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி தொடர்ந்து நடத்தி வரும் மூர்க்கத்தனமான இனப் படுகொலைகளுக்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். அது இஸ்ரேலுக்கான தடைகளாகவும் அமையலாம்.
-லத்தீப் பாரூக்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!