“கடுமையான அழுத்தத்தை பாவித்து இலங்கை ஜனாதிபதி ஜயவர்தனவை உடன்பட வைத்த இந்திய-, இலங்கை ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்கவேண்டியதில்லை, ஏற்காவிட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருங்கள்' என்று பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி வினயமாக கேட்டது மட்டுமுன்றி 'வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஓர் இடைக்கால அரசை நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஓர் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளவும், ஆயத்தமாக இருக்கிறேன்' என கூறியபோதும் 'ஒற்றை ஆட்சி முறையான அதிகாரப்பகிர்வை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை' என தலைவர் பிரபாகரன் மறுதலித்து தனது அதிருப்தியை பாரதப் பிரதமரிடமே தெரிவித்த சம்பவங்கள் பிற்கால அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கின.
இந்திய ,- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னையநாள் 1987 ஜூலை 28ஆம் திகதி நள்ளிரவு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் இந்தியப் புலனாய்வுப்பிரிவினர் சந்தித்து 'பிரதமர் ராஜீவ் காந்தி அவசரமாக தங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் இருவரையும் பாரதப் பிரதமர் தங்கியிருந்த இடத்துக்கு அவசரமாக அழைத்துச்செல்கிறார்கள்.
வெண்ணிற ஆடை அணிந்து, மிக ஆவலோடு இவர்கள் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர். அவருடன் புலனாய்வுத்துறை அதிபர் நாராயணனும் தமிழக அமைச்சர் பண்டிருட்டி இராமச்சந்திரனும் உடன் நிற்கிறார்கள். கவர்ச்சியான புன்னகையுடன், தலைவர் பிரபாகரனையும் ஆலோசகர் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் வரவேற்கிறார்.
உரையாடல் உடன் ஆரம்பிக்கப்படுகிறது. தலைவர் பிரபாகரனிடம் பாரதப் பிரதமர் உரையாடத் தொடங்குகிறார் “ஏன் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள், குறைபாடுகளை விபரமாக தெரிவியுங்கள்“ என வினவுகிறார்.
கேட்பது இந்திய வல்லரசின் பிரதமர், பதில் அளிக்கப்போவது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர். தலைவருக்காக, ஆலோசகர் பாலசிங்கம் விபரமாக விளக்கினார்.
“இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு மிக இறுக்கமான, நெகிழ முடியாத விதிகளைக் கொண்டது. பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையப்பட்டிருக்கிறது.
இதன்கீழ் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கு மத்தியில் அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப்பகிர்வு செய்வது இயலாது. அது மட்டுமன்றி நிறைவேற்றுதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அமுலில் உள்ளது. இத்தகைய ஒற்றையாட்சி யாப்பை, இந்திய -, இலங்கை ஒப்பந்தம் நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே நியாயப்பூர்வமாக அதிகாரப்பகிர்வு செய்யும் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது.
அத்துடன், தமிழரின் நிலவுரிமை முக்கியமானது. வடக்கு, கிழக்கு தமிழ்ப்பேசும் மக்களின் சொந்த நிலம், அவர்களது பாரம்பரிய தாயகம். அந்த நிலத்தை பிரிக்கும் எந்தத் திட்டத்தையும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
வடக்கு, கிழக்கு இணைப்பு ஒப்பந்தத்தில் தற்காலிகமானதே. நிரந்தர இணைப்புக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வாக்கெடுப்பின்போது சிங்கள, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வடக்கு, கிழக்கு நிரந்தரமாக பிளவுபட்டு விடும்“ என பிரதமரிடம் வரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இந்த விளக்கத்தை மிகப் பொறுமையுடனும் அமைதியாகவும் கேட்டுக் கொண்டிருந்த பாரதப் பிரதமர், அதற்குப் பதில் அளிக்கும் முகமாக , “உங்களது பிரச்சினைகளை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. மாகாண சபை முறைமையின் குறைபாடுகள் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ஜயவர்தனவுடன் பேசி தீர்வு தேடித்தருவேன். கட்டம் கட்டமாகவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். ஒரே தடவையில் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
கடுமையான முயற்சியின் பின்பு இணைக்கப்பட்ட மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு பிரதேச சுய ஆட்சியைப் பெற்றுள்ளோம். இது ஒரு பெரிய முன்னேற்றம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் வாக்கெடுப்புக்கு விடாமல் ஒத்திவைக்கும்படி ஜயவர்தனவிடம் பேசுவேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்ப வேண்டும். உங்களது அமைப்பின் ஒத்துழைப்பும், ஆதரவும் வேண்டும்“ என பாரதப் பிரதமர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த பண்ருட்டி, பிரதமர் கூறியதை தமிழில் விரிவாக விளக்கினார். பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தரவாதத்தையோ பண்ருட்டியின் அழகான விளக்கத்தையோ கேட்டு தலைவர் பிரபாகரன் திருப்திப்படவில்லை என்பது அவரது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனை பேணவில்லை, பாதகமாக இருக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரபாகரன் மறுதலித்தார்.
முரண்பாட்டை வளர்க்க விரும்பாத பாரதப் பிரதமர், தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, “நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும்“ என்று கேட்டார்.
இந்த இடத்தில் குறுக்கிட்டு கருத்து தெரிவிக்க விரும்பிய பண்ருட்டி, “இது ஓர் அற்புதமான திருப்பம் அல்லவா? பாரதப் பிரதமரே உங்களது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை, ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இந்த சிறிய சலுகையையாவது இந்திய அரசுக்கு நீங்கள் செய்யக் கூடாதா“ என்று ஆலோசனை வழங்கினார்.
இச்சந்தர்ப்பத்தில் தலைவர் பிரபாகரன் பதில் அளிக்கையில் “ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நாம் அதை எதிர்க்கிறோம் என்றுதானே அர்த்தம்“ என அடித்துக் கூறியதைக் கேட்ட பாரதப் பிரதமர் பேச்சை வேறு திசைக்கு திருப்ப முற்பட்டார்.
“உங்களது இயக்கத்துக்கும் மக்களுக்கும் ஜயவர்தனவின் மீது நம்பிக்கையில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைத்தான். என்றாலும் அவர்மீது கடுமையான அழுத்தம் பிரயோகித்து, முக்கியமான சலுகைகளைப் பெற்று இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறோம்.
மாகாண சபை முறையில் குறைகள் இருக்கலாம். எனினும், நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி, பிரதேச சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம். மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்த நீண்ட காலம் எடுக்கலாம்.
அந்த கால இடைவெளியில் வடக்கு, கிழக்கில் ஓர் இடைக்கால அரசை நிறுவ முடியும். இந்த இடைக்கால அரசில் தங்கள் அமைப்பு பிரதான பங்கு வகிக்கலாம். தமிழர் மாநிலத்தில் ஓர் இடைக்கால அரசு நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஓர் இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்“ என பாரதப் பிரதமர் தெரிவித்தார்.
இது, தமிழக அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனை பரவசத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் உணர்ச்சி வசப்பட்டவராக, “இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவ விடவேண்டாம். விடுதலைப்புலிகள் நிர்வாக ஆட்சியை நிறுவும் அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய,இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம்.
அதற்கு முன்பே, ராஜீவ் -– பிரபா ஒப்பந்தம் செய்யப் பாரதப் பிரதமர் ஆயத்தமாக இருக்கிறார். இதை பகிரங்கப்படுத்த தேவையில்லை. - இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம்" என ராஜீவ்-– -பிரபா ஒப்பந்தத்துக்கு ஒரு பிரமாதமான வடிவம் கொடுக்க முற்பட்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மாகாண சபை உருவாக்குவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு அதில் விடுதலைப்புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
இன்னொரு விடயமாக சகல தமிழ்ப் போராளிகள் அமைப்புக்களுக்கும் இடைக்கால நிர்வாக கட்டமைப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென பாரதப் பிரதமர் கேட்டுக் கொண்டபோது அதை தலைவர் பிரபாகரன் மறுதலித்து, இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும், குறைந்தளவு பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது.
வடக்கு ,கிழக்கு இடைக்கால நிர்வாகம், கட்டமைப்பு, அதிகாரம் போன்றவை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசி முடிவெடுப்பதாக பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த உடன்பாடுகளுக்கும் முடிவுகளுக்கும், பிற்காலத்தில் என்ன நடந்தது என்பது தேசமறிந்த செய்தியாகும். 13ஆவது திருத்தத்துக்கு அமைய, மாகாணசபை உருவாக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
விடுதலைப்புலிகள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்குகொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு தற்காலிக இணைப்புடன் ஆட்சி நிறுவப்பட்ட காலத்தில் வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஆட்சி வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டது.
13ஆவது திருத்தத்தில் கூறப்பட்ட அதிகாரங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரங்களான காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், 13ஆவது திருத்தத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி ஜயவர்தனவின் இந்த ஏமாற்றுத்தனம் பற்றி வரதராஜப் பெருமாள் தலைமையிலான அரசு இந்தியப்பிரதமருக்கு பல முறைப்பாடுகளை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்காத நிலையில் இவர்களின் பின்வாங்கல் காரணமாகவும் விடுதலைப்புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவும் மாகாண ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திய இராணுவம் வாபஸ் பெறப்பட்டது. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது. தற்போது மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
“மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டும் இலங்கை அரசாங்கமானது தனது நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமானது எது என்பதைத் தீர்மானித்து அதனை நடை முறைப்படுத்துவதனூடாக நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும்” என, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சசி தரூர் தெரிவித்திருந்தததை நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
திருமலை நவம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!