news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரூ.1.15 கோடி கொள்ளை : 14 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

03 Jun, 2026
வல்வெட்டித்துறை, கொம்பந்துறை பகுதியில் 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், 14 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரைத் தேடி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 74 இலட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைதான இருவரும் தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொம்பந்துறைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள்  கடந்த மாதம் 27-ஆம் திகதியன்று புகுந்த சந்தேக நபர்கள், அங்கிருந்த 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்கள்:

    திருடிய பணத்தைப் பதுக்குவதற்காக, சந்தேக நபர்கள் காணி ஒன்றினுள் குழி தோண்டிப் பணத்தைப் புதைக்க முற்பட்டுள்ளனர்.

    அவ்வேளையில், காணியின் உரிமையாளர் இதைக் கண்டு, தனக்கான பங்காக 40 இலட்சம் ரூபாவைத் தன்னிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.

    பணத்தைப் பெற்றுக்கொண்ட மூன்றாவது சந்தேக நபரான அந்த காணி உரிமையாளர், தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பகுதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, 14 வயது சிறுவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவரை அச்சுவேலியில் உள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளை, 19 வயதுடைய சந்தேக நபரைத் தொடர்ந்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!