news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சை : முக்கிய அறிவிப்பு வெளியீடு

16 Dec, 2025

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கான ஆட்சேர்ப்பிற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி, குறித்த பரீட்சை எதிர்வரும் 20ஆம் திகதி (சனிக்கிழமை) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பரீட்சைக்கு விண்ணப்பித்து இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், இன்றிலிருந்து (16ஆம் திகதி) 19ஆம் திகதி வரை, அலுவலக நேரத்தினுள் 021 221 9939 என்ற வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப் பிரிவின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி அட்டை கிடைக்கப்பெற்றதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், அடையாள எண், பரீட்சை நிலையம் உள்ளிட்ட விவரங்களை கவனமாகச் சரிபார்த்து, அதன் மறுபக்கத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உடனடியாக முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழுமையாகப் பூரணப்படுத்தப்படாத அனுமதி அட்டையுடன் பரீட்சை நிலையத்திற்கு வருகை தரும் பரீட்சார்த்திகள் எக்காரணம் கொண்டும் பரீட்சை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேற்குறித்த பரீட்சை தொடர்பாக மேலதிக தகவல்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்படும் பரீட்சார்த்திகள், 021 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் மாத்திரமே தொடர்பு கொள்ளுமாறும் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Comments

Write the comments...............