RJ Balaji : நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் பிரபல பாடல் ஒன்றை தன் படத்தில் 5 விநாடிகள் உபயோகிக்க, 25 லட்சம் கேட்கப்பட்டதாக பகீர் கிளப்பியுள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராகவும், காமெடியாகவே விழிப்புணர்வூட்டும் கதைகளை சொல்பவராகவும் இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவர், சமீபத்தில் கொடுத்திருந்த நேர்காணலில் பிரபல பாடலை உபயோகிக்க ரூ.25 லட்சம் கேட்கப்பட்டதாக கூறியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி, ரேடியோவில் ஆர்.ஜே.வாக இருந்து திரையுலகிற்குள் நுழைந்தவர். இவருக்கு ஆரம்பத்தில், நகைச்சுவை கதாப்பாத்திரங்களும் துணை கதாப்பாத்திரங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டது.
அதை விடுத்து, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், தான் இயக்கும் படங்களிலேயே ஹீரோவாக நடித்தார். அப்படித்தான் எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. தற்போது சூர்யாவை வைத்து ‘கருப்பு’ படத்தை எடுத்திருந்தார்.
கருப்பு திரைப்படம் கடந்த மே 15ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற படமாக இருக்கிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து ஆர்.ஜே.பாலாஜியும் நடித்திருக்கிறார். இதில் இவர் வில்லனாக வருகிறார்.
த்ரிஷா, சிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் குறித்து ஒரு நேகாணலில் பேசும் போதுதான் அவர் ஒரு முக்கியமான விஷயத்தினை பகிர்ந்துள்ளார்.
கருப்பு திரைப்படத்தில் பிற பாடல்கள்..
‘கருப்பு’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் பிற படங்களின் ரெஃபரன்ஸ்களும், ஆர்.ஜே.பாலாஜியின் பிற படங்களின் ரெஃபரன்ஸ்களும் வைக்கப்பட்டிருந்தன.
“மூக்குத்தி அம்மன் படத்துக்கு மூணு டிக்கெட் இருக்கு..வரியா?” என சூர்யா கேட்பது போல ஒரு சீன் வரும். இந்த சீன், நானும் ரௌடிதான் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி பேசிய டைலாக்கில் இருந்து எழுதப்பட்டது.
இந்த நிலையில், ஒரு சீனில் ஆர்.ஜே.பாலாஜி “நான் தான் சிவன்..விக்னேஷ் சிவன்” என்று சொல்லிக்கொண்டு “ரத்த மாறன்..வெற்றி மாறன்..” என்று பாடிக்கொண்டு போவார். ஜெயிலர் படத்தில் இடம் பெற்றிருந்த “ரத்தமாரே” பாடலை விக்னேஷ் சிவன்தான் எழுதியிருந்தார். இதை வைத்துதான் இந்த பாடலை அவர் அப்படி படத்தில் பாடியிருப்பார்.
5 வினாடி பாடலுக்கு 25 லட்சம்!
கருப்பு படத்தில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ரத்தமாரே’ பாடலை உபயோகிக்க நினைத்ததாக கூறும் ஆர்.ஜே.பாலாஜி, அதை 5 நொடிகள் பயன்படுத்த ரூ.25 லட்சம் கேட்கப்பட்டதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது தனக்கு மிகப்பெறிய தொகையாக தெரிந்ததால், அந்த பாடலை தானே ‘ரத்த மாறன்..வெற்றிமாறன்” என அதை மாற்றி பாடியதாகவும் தெரிவித்திருந்தார்.
காப்பிரைட்ஸ் விதிகள்:
முன்பெல்லாம் ஒரு படத்தின் பாடலையோ அல்லது இசையையோ மற்ற படங்களில் நகைச்சுவைக்காகவோ, ரெஃபரன்ஸுக்காகவோ எளிதாகப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், தற்போதைய டிஜிட்டல் மற்றும் ஓடிடி (OTT) காலகட்டத்தில், காப்பிரைட்ஸ் விதிகள் மிகவும் கடுமையானதாக மாறியுள்ளன.
சிறிய பிட் மியூசிக் பயன்படுத்த வேண்டும் என்றாலும் கூட, சம்பந்தப்பட்ட ஆடியோ நிறுவனத்திடம் முறைப்படி 'ராயல்டி' செலுத்தி தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டியது அவசியமாகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!