ilakkiyainfo

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2014)

அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த “கிழக்கு பிளவு”அவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

DSC_0134புலிகளின் தலைமை தளபதியும் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான கேர்ணல் கருணா அறிவித்த கிழக்கு பிளவே மேற்படி நெருக்கடிக்கு காரணமாயிற்று.

புலிகளின் வரலாற்றை புரட்டிபோடும் வல்லமை அந்த கிழக்கு பிளவிற்குள் ஒழிந்திருந்ததை இருந்ததை புலிகளால் அனுமானிக்க முடியவில்லை.

கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாகிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதில் புலிகள் தவறுக்குமேல் தவறிழைத்தனர். கிழக்கு பிளவை தாண்டிச்செல்லுதல் என்பதே கடைசிவரை புலிகளால் முடியாது போன ஒரே காரியம் என வரலாறு  தன்பக்கங்களில்  குறித்துக்கொண்டது. அதன் காரணமாக 2004ம் ஆண்டை தொடர்ந்துவந்த ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாக அமைந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிடையே நீண்ட காலமாக தொடர்ந்துவந்த பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளே இந்த கிழக்கு பிளவின் அடிப்படையாக இருந்தது.

எனினும் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் உருவாக்கிய நிழல் நிர்வாக கட்டமைப்பில் நியமிக்கப்பட்ட 32 துறைசார் பொறுப்பாளர்களும் வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாண மக்களும் போராளிகளும் வடக்கு தலைமையால் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்.

என்கின்ற குற்றச்சாட்டே இந்த கிழக்குபிளவிற்கு உடனடி காரணமாயிற்று புலிகளது இராணுவ வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்த ஜெயந்தன் படைபிரிவும், அதன் தளபதி கருணாம்மானும் சுமார் ஆறாயிரம் போராளிகளுடன் பிரிந்து நின்று கிழக்கு பிளவை அறிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் சார்பில் அவர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை பல தளபதிகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் ஆதரித்து ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் கிழக்கு மாகாணமெங்கும் நடாத்தினர். ஆனால் அந்த மக்களின் குரல்களுக்கு புலித்தலைமை கிஞ்சித்தேனும் மதிப்பு வழங்கவில்லை.

“கருணாம்மான் தமிழ் தேசிய துரோகி “என்றும் அவர் ஒரு “தனிநபர்”என்றும் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் எத்தனிப்பில் புலிகள் இறங்கினர்.அதுமட்டுமன்றி புலிகளின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகள் மீது படையெடுத்து அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர்.

2004ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி அறிவிக்கப்பட்ட கிழக்கு பிளவானது யாழ்-மேலாதிக்கத்தின் இராணுவ வடிவமான  தமிழீழ  விடுதலை   புலிகளால் மூர்க்கத்தனமாக கையாளப்பட்டமை மாபெரும் படுகொலைக்கு வழிவகுத்தது.

கிழக்கு பிளவின் மீதான புலிகளது இந்த மிலேச்சத்தனமான அணுகுமுறைக்கு ஊக்கமளிப்பவர்களாகவும் ஆலோசனை வழங்குவர்களாகவும் தமிழ் புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் செயற்பட்டனர்.

இது அன்று தமிழ் இனத்துக்கு கிடைத்த பெரும் சாபமாகும். எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தவர்களுக்கு தமது சொந்த போராளிகளுடன்,நேற்றுவரை ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேச தெரியாதுபோனது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் ஆற்றங்கரையில் மிகப்பெரிய படுகொலையொன்றை வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் படையினர் நிகழ்த்தினர். பிரிந்து செல்கிறோம், ஜனநாயக பாதைக்கு திரும்புகிறோம், சரணடைகிறோம் என்று என்று சொன்ன கிழக்கு போராளிகள் சுமார் 210 பேர் கோரத்தனமாக படுகொலை செய்யப்பட்டனர்.

பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு அவர்களது உடலங்கள் சின்னபின்ன படுத்தப்பட்டன. அந்த பிரதேசத்து கிராமவாசிகள் எல்லோரும் துரத்தியடிக்கப்பட்டு எவரது உடல்களும் புதைக்கப்படாமலும் அடையாளம் காணப்படாமலும் சுமார் ஒரு வாரத்துக்கு வெருகல் பிரதேசம் நாற்றமெடுத்து கிடந்தது.

இத்தனைக்கும் ஏப்ரல் 10ல் இந்த வெருகல் படுகொலை நடாத்தப்பட்டபோது இலங்கையில் நோர்வே தலைமையிலான சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. இந்த படுகொலையை  தொடர்ந்து கிழக்கு மாகாணம்   எங்கும் புகுந்த புலிகள் கிழக்கு பிளவை ஆதரித்த புத்திஜீவிகளை கொன்று வீசினர் ராஜன் சத்திய மூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம்,தில்லைநாதன் என பலரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளின் தொடராக கிழக்கு போராளிகள் பிரபாகரனது தலைமையிலான புலிகளுடன் மோதலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தனித்த கிழக்குமாகாண கோரிக்கை வலுப்பட்டது. கிழக்குப்போராளிகள் தமது போராட்டத்தின் ஊடாக   வன்னிபுலிகளை கிழக்கிலிருந்து துரத்தியடிப்பதில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வெற்றிபெற்று அதன் பின்னர்  ஜனநாயக பாதையில் காலடி வைத்தனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் எனும் அரசியல் கட்சி கிழக்கிலிருந்து உதயமானது.வடக்குக்குள் மட்டும் குறுக்கப்பட்ட புலிகளின் ஆயுள் 2009ம் ஆண்டு அரசபடைகளால் முடித்து வைக்கப்பட்டது.

– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்

வெருகல் படுகொலை நினைவு தினம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (வெருகல் படுகொலை) மாவீரர்களின் நினைவு தினம்   (10.04.2012) வெருகல் சிறுவர் பூங்காவில் கட்சியின் தேசிய தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இட்ம்பெற்றது.

இந் நிகழ்வில் கட்சியின் தேசிய தலைவர் அவர்கள் தனது மாவீரர்களுக்கான உரையினை ஆற்றினார்.

பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாலை 06.05மணிக்கு கட்சியின் தலைவரினால் மற்றும் மாவீரர்களின் குடும்பத்தினரால் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் உப தலைவர் நா.திரவியம், கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜா, கட்சியின் முக்கியஸ்த்தர்களான துரைநாயகம் மற்றும் குமாரதுரை, கட்சியின் முக்கியஸ்த்தர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந் வெருகல் படு கொலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 210 மாவீரர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version