ilakkiyainfo

தமிழ்நாட்டில் மோடி அலையை சுருட்டிய லேடி அலை: தமிழகத்தின் 39 தொகுதிகளில் அதிமுகவுக்கு 37, பாஜக கூட்டணிக்கு 2

தமிழ் நாட்டின் 39 தொகுதிகளில் 37- ஐ முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. அதிமுக இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ச்சி கண்டுள்ளது.

2009-ம் ஆண்டில் 18 தொகுதிகளை வென்றிருந்த கருணாநிதி தலைமையிலான திமுகவால் இம்முறை ஒரு ஆசனத்தைக்கூட தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

கன்னியாகுமரி தொகுதியை பாஜக வேட்பாளர் வென்றுள்ளார்.

 

தர்மபுரி தொகுதி பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வசம் சென்றுள்ளது.

 

சென்னையின் மூன்று தொகுதிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றாலும், மூன்றிலும் அதிமுகவே முன்னணி. மத்திய சென்னையில் திமுகவின் தயாநிதி மாறன் பின் தங்கியே இருக்கிறார். தென் சென்னையில் இரண்டாவது இடத்துக்கு திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், பாஜகவின் இல கணேசனுக்கும் இடையே இழுபறி.

இந்திய நேரம் மாலை 8 மணி

140516163718_aiadmk_india_304x304_bbcஅதிமுக வெற்றியைக் கொண்டாடி மகிழும் தொண்டர்கள்

சொடுக்கு பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.மருதராஜா, திமுக வேட்பாளர் சீமானூர் பிரபுவைவிட 2.11 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து மூன்றாமிடத்தில் பின் தங்குகிறார்

 

இந்திய நேரம் மாலை 7:45 மணி

 

இதுவரை முடிவுதெரிந்த தொகுதிகள் 11

 

அரக்கோணம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருப்பூர்.

 

இவை அனைத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

 

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை,திமுக வேட்பாளர் சின்னசாமியை விட 1.95 லட்சம் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

 

அரக்கோணத்தில் அதிமுக வேட்பாளர் ஜி.ஹரி 2.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ தோல்வி.

 

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் 2.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆ.மணிமாறனை தோற்கடித்துள்ளார்.

 

இந்திய நேரம் மாலை 7:30 மணி

 

தமிழ்நாட்டின் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் , ஆர்.எஸ்.பாரதியைவிட சுமார் 19,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். தேமுதிக 20,000 வாக்குகளையும்,காங்கிரஸ் 6,500 வாக்குகளையும் , ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஞாநி சங்கரன் 5,700 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

 

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி

 

திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் டி.ரவிக்குமார் 3.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியிருக்கிறார்.

 

தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 1.61 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எம்.வசந்தியிடம் தோல்வி

 

இந்திய நேரம் மாலை 7:00 மணி

 

திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் டி.ரவிக்குமார் 2.74 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியிருக்கிறார்.

 

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் திமுக வேட்பாளர் ஜெகனை 1 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

 

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 46 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

 

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமியை 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

 

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து

தேர்தல் முடிவுகளில் மக்களுக்கு மகிழ்ச்சி என்றால், எங்களுக்கும் மகிழ்ச்சி என தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

வெள்ளி பிற்பகல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் வெற்றியைக் கண்டு வெறிகொள்வதும் தோல்வியைக் கண்டு துவள்வதும் தி.மு.கவின் வழக்கமல்ல என்று குறிப்பிட்டார்.

 

இந்திய நேரம் மாலை 6:00 மணி

திருநெல்வேலி தொகுதியில் அ.இ.அ.தி.மு.கவின் கே.ஆர்.பி. பிரபாகரன் 3,98,139 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த தேவதாச சுந்தரம் 2,72,040 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த சிவனனைந்த பெருமாள் 1,27370 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 

வேலூரில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் பி. செங்குட்டுவன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 387719 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் 324326 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் அப்துல் ரஹ்மான் 205896 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

இந்திய நேரம் மாலை 5:00 மணி

 

தமிழகத்தில் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட இடங்கள் 2. நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய அவ்விரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

 

நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர்.கே.கோபால், திமுக வேட்பாளர் ஏ கே எஸ் விஜயனை 1 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

 

தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம் 1.78 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

 

புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலை, காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசாமி 61000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கல்

 

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் இடத்துக்கு பாஜக திமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜே.ஜெயவர்த்தன், திமுக வேட்பாளர் டிகேஎஸ் இளங்கோவனைவிட 9,900 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். டி கே எஸ் இளங்கோவனை விட இல.கணேசன் 300 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளார்.

 

இந்திய நேரம் மாலை 4:45

 

ஆரணியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 1.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்குகிறார்

 

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

“அதிமுகவின் வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி” – விஜயகாந்த்

2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்தின் அறிக்கை பின்வருமாறு

“பாராளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் பாரதப்பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்கள். அவர்களின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் துயரங்கள் நீங்கிடும்.

லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி நடைபெறும். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வறுமை ஒழியும். உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாறிடும் என்ற நம்பிக்கையோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.விற்கு மாற்றாக இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆளும் கட்சியினர் தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சவாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொது மக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும்.

“இருந்த போதிலும், இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தேமுதிக தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய நேரம் மாலை 4:30 மணி நிலவரம்

தென் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் இல.கணேசன் மூவாயிரத்து ஐநூறு வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அத்தொகுதியில் திமுகவின் டி கே எஸ் இளங்கோவன் மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளார்.

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தற்போது 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

ஈரோடு தொகுதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான மதிமுகவின் கணேசமூர்த்தி 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் ஹைதர் அலி 1 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகளில் பின்தங்கியுள்ளார்.

இந்திய நேரம் மாலை 4 மணி நிலவரம்

நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 1 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர் சி. கோபாலகிருஷ்ணன் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் பதினாலாயிரத்து தொள்ளாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

தென்காசி தனித் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 1 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் 82 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

தென் சென்னையில் திமுக வேட்பாளர் டி கே எஸ் இளங்கோவன் 185 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

இந்திய நேரம் மாலை 3:30 மணி

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

மோடிக்கு, ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த வாழ்த்து

தமிழ் நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘இந்த வரலாற்று மிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள் மோடி’ என்று அவர் தனது டுவிட்டர் கணக்கிலிருந்து தெரிவித்துள்ளார்.

‘ஆதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய நேரம் பிற்பகல்1:45 நிலவரம்

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் முன்னிலை வகிக்கிறார்.

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.

மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

மூன்றாண்டுகால அதிமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி: ஜெயலலிதா

நடந்துமுடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம் கடந்த மூன்றாண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகளே என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெ ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக வாய்ப்பிருக்கும் அதிமுக என்பது இந்திய நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயற்படுமா என்று கேட்டபோது, “பொறுப்புள்ள கட்சியாக” செயற்படும் என்று தெரிவித்த தனது பதிலில் எதிர்க்கட்சி என்கிற வார்த்தையை கவனமாக தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி பிற்பகல் 1:15 மணி

புதுச்சேரி தொகுதியில் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை விட சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இன்னும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்படவேண்டியுள்ளது.

மோடிக்கு கருணாநிதி வாழ்த்து; மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.

மக்களின் இந்த முடிவை, “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது.

“வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக பிரச்சார யுக்தியே வெற்றிக்கு காரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

இந்தியா முழுவதும் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்றிருக்கும் நிலையில், சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், மோடி அலை வீசியதாக தற்போதும் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சி பிரச்சார யுக்தியை சிறப்பாகக் கையாண்டது என்று தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி பொய் சொல்லி பிரச்சாரம் செய்தார், இடத்திற்குத் தகுந்ததுபோல மோடி பிரச்சாரத்தை வகுத்துக்கொண்டார் என்றும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்.

இலங்கைப் பிரச்சனையை முன்னிறுத்தி தங்களைவிட்டு தி.மு.க. பிரிந்து சென்றதாகவும் ஆனால், தற்போது அதற்குப் பலனில்லை என்பது தெரிந்துவிட்டதாகவும் இலங்கைப் பிரச்சனை தமிழக தேர்தலில் ஒரு பிரச்சனை அல்ல என்றும் ஞானதேசிகன் தெரிவித்தார்.

வெற்றி – தோல்வி என்பது இந்திய ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் என்றும், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதாகவும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்.
இந்திய நேரப்படி மதியம் 13:30

இதுவரை வெளியாக வாக்கு எண்ணிக்கைகளில் கட்சி வாரியான வாக்கு சதவீதம்

அதிமுக – 44.5%, 3974083 வாக்குகள்

திமுக – 22.5%, 2007725 வாக்குகள்

பாஜக – 5.3%, 475955 வாக்குகள்

தேமுதிக – 4.8%, 426310 வாக்குகள்

காங்கிரஸ் – 4.4%, 393949 வாக்குகள்

பாட்டாளி மக்கள் கட்சி – 4.1%, 363058 வாக்குகள்

மதிமுக -4.0%, 353798 வாக்குகள்

சுயேச்சைகள் – 2.2%, 196789 வாக்குகள்

விடுதலை சிறுத்தைகள் – 1.4%, 125164 வாக்குகள்

யாருக்கும் வாக்கு இல்லை -1.4%,125026 வாக்குகள்

இந்திய நேரப்படி மதியம் 12:15 மணி

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் பத்தாயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாருக்கும் இடையிலான வாக்குவித்தியாசம் ஐயாயிரமாக உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.

கோவை தொகுதியில் அதிமுக – பாஜக வேட்பாளர்கள் இடையிலான வாக்குவித்தியாசம் ஏழாயிரமாக உள்ளது. கோவையிலும் அதிமுகவே முன்னிலையில் உள்ளது.

விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய நேரப்படி மதியம் 12 மணி

மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளுக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முன்னிலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவ்விரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இந்திய நேரப்படி காலை 11:15 மணி

அதிகாரபூர்வமாக முன்னிலை தெரிந்துள்ள 37 தொகுதிகளில் அ.தி.மு.க. 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் பாரதிய ஜனதாக் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த காங்கிரஸ் கட்சியின் எச் வசந்தகுமார் தற்போது பின்தங்க ஆரம்பித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்க்ரஸ் கட்சியின் நாராயணசாமியின் முன்னிலை நீடிக்கிறது.

இந்திய நேரப்படி காலை 11:00 மணி

புதுச்சேரியில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான நாராயணசாமி முன்னிலை வகிக்கிறார். என்.ஆர். காங்கிரசின் ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்திய நேரப்படி காலை 10:45 மணி

தமிழ்நாட்டில் முன்னிலை விவரங்கள் தெரிந்துள்ள 29 தொகுதிகளில், அ.தி.மு.க. 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.

முன்பு முன்னிலை பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி சுமார் 20 ஆயிரம் வாக்குகளையும் திருமாவளவன் சுமார் 16 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர்

மிகவும் கவனிக்கப்பட்ட நீலகிரி தனித் தொகுதியில் திமுக வேட்பாளர், முன்னாள் மத்திய அமைச்சர்,ஆ. ராசா பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சி. கோபாலகிருஷ்ணன் ராசாவைவிட 8,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

அரக்கோணத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி. ஹரி தி.மு.க. வேட்பாளர் இளங்கோவைவிட இரண்டாயிரம் வாக்குகள் முன்னிலை.
கடும் போட்டியில் சிதம்பரம் தொகுதி

சிதம்பரம் தனித் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் ஊசலாட்டத்தில் இருக்கிறார். முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்த அவர்,இரண்டாவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசியைவிட இரண்டாயிரம் வாக்குகள் அவர் முன்னிலை பெற்றுள்ளார்

மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணி ஷங்கர் ஐயர் பின் தங்கி வருகிறார்

விருதுநகர் தொகுதியில் வைகோ பின்னடைவு

முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணன் 7716 வாக்குகளையும் தி.மு.க. வேட்பாளர்  ரத்தினவேலு 4717 வாக்குகளையும் வைகோ 4668 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

Exit mobile version