1980 களில் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படையினர் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
டெய்லி மாவெரிக் இதனை தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
லண்டன் காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கினி மினி சேவையை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்குமான தொடர்பு குறித்த நூலொன்று வெளியாகியுள்ளதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பத்தில் கினிமினி பிரிவினர் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பினார்கள் என அந்த நூல் தெரிவித்திருந்தது.
இலங்கை படையினருக்கான பிரிட்டனின் உதவிகளை தனியார்மயப்படுத்தலாம் என முன்னாள் பிரதமர் மார்கிரட் தச்சர் தெரிவித்ததை தொடர்ந்து கினிமினி பிரிவினர் இலங்கையின் உள்நாட்டு யுத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
கே.எம்எஸ் பிரிவினர் இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.
இந்த விசேட அதிரடிப்படையினர் அட்டுழியங்களில் ஈடுபடுவதில் பெயர்பெற்றவர்கள்,1987 இல் இலங்கையின் கிழக்கில் உள்ள கொக்கட்டிச்சோலையில் இறால் பண்ணையில் இவர்கள் 180 தமிழர்களை கொலை செய்திருந்தனர்.
மேலும் இவர்கள் பிரிட்டனின் விமானவோட்டிகளை பயன்படுத்தினார்கள், அவர்கள் இலங்கையின் தாக்குதல் ஹெலிக்கொப்டர்களை இயக்கினார்கள் 1985 ம் ஆண்டு பிரமானந்தாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
லண்டனை சேர்ந்த தமிழர் அமைப்பொன்று கூலிப்படையினர் தொடர்பான ஐக்கியநாடுகள் குழுவிடம் இந்த விடயங்களை தெரிவித்திருந்தது.
குறிப்பிட்ட ஐநா குழு கூலிப்படையினரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் கேஎம்எஸ் குறித்த தனது கரிசனைகளை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தது.
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் ஐநா கேள்வி எழுப்பியிருந்தது,ஐநாவின் ஐந்து விசேட அறிக்கையாளர்களும் இது தொடர்பில் தங்கள் கரிசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.
1980களில் பிரிட்டனின் கூலிப்படைகள் இலங்கையில் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்த பரிந்துரைகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக பிரிட்டனின் இராஜதந்திரிகள் ஜெனீவாவில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.