இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது.
இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் தடை விதித்திருந்தன.
மாவீரர் தினத்தையொட்டி யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் நினைவாக அவரது படத்தை வைத்து தீபம் ஏற்றும் குடும்பத்தினர்
கடந்த காலங்களில் மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அரசாங்கத்தினாலும், நீதிமன்றங்களினாலும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருந்ததுடன், வடக்கில் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
மாவீரர நினைவு தினத்தை அனுசரிக்கும் தமிழர்களின் காட்சிகளை படப்பதிவு செய்யும் இலங்கை ராணுவத்தினர்
தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனாலும், மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதனாலும், மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்க அரசாங்கத்தினால் மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதற்கு தடை விதித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்ற முதலாவது ஆண்டு, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை செய்ய கெடுபிடிக்கள் விதிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், இந்த ஆண்டு ராணுவ கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.
மக்கள் ஒன்று திரண்டு, மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வுகளை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழ்; அரசியல்வாதிகள், மாவீரர்களின் உறவினர்கள் என தமிழர் தாயகத்திலுள்ள பெரும்பாலானோர் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் தினத்தை தமது வீடுகள் மற்றும் தமது அலுவலகங்களில் அனுஷ்டித்திருநதனர்.
தமிழர் தாயகம் முழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர்.
முதலாவது மாவீரர் நிகழ்வு
1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூரும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.
மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.
2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை
இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. ‘மாவீரர் துயிலும் இல்லங்கள்’ இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.