பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்றுக்கும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களுக்கும் ஆசைப்பட்ட நபர் ஒருவர் 31 இலட்ச ரூபாயை இழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
ஒரு மாத காலத்துக்கு முன்னர் அவரது மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் இடம்பெற்ற சீட்டிழுப்பு ஒன்றில் உங்களின் கைத்தொலைபேசி இலக்கத்துக்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களும் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ் செய்தி ஒன்று வந்துள்ளது.
இதனை நம்பி குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள், கார், காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்கள் உள்ள புகைப்படங்கள் மின்னஞ்சல் ஊடாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வைப்பகப்படம்
அதன் பின்னர் குறித்த மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக ண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர்.
அதனை நம்பி இவர்கள் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர். பின்னர் ஒரு கிழமை இடைவெளியில் திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களைக் கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபா பணத்தை அந்தக் கும்பல் பெற்றுள்ளது.
இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பண பரிசிலும் காரும் இலங்கை வந்து விட்டது எனவும் அதனை பெற்றுகொள்ள கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது.
அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர். அங்கு அவர்களை சந்தித்த நபர் ஒருவர் கறுத்தப் பெட்டி (சூட்கேஸ்) ஒன்றைக் கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண் பணமும், காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியைக் கையளித்துள்ளார்.
பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்தப் பரிசுத்தொகை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் அத்துடன், வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள். இந்த பெட்டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் எனக் கூறி குறித்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும் திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை.
தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.
அதனையடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்துப் பார்த்த போது, உடைந்த கண்ணாடிப் போத்தல்கள், பஞ்சு, நாணயத் தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசித் துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. அதன் போதே அவர்கள் தாம் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார்கள்.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளனர் எனவும், அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.