ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகசெவன, புவக்பிட்டிகம எனும் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் அவ்வீட்டில் தனிமையில் இருந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் வீட்டில் தனது கணவர் வரும் வரையில் முன் விறாந்தையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது அப்பெண்ணின் சகோதரியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் வீட்டு வாசலினால் யாரோ வீட்டினுள் நுழைவதைக் கண்ட இப்பெண், அது தனது கணவராக இருக்கும் என நினைத்து, “அக்கா கோல் எடுத்தாள், அவளுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன்….” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தான் கூறியதற்கு கணவரிடமிருந்து பதில் எதுவும் வராததால் வீட்டினுள் நுழைந்திருப்பது தனது கணவர் அல்ல என்பதை ஊகித்துக் கொண்ட அப்பெண் அடிக்கடி பணம் கேட்டு வரும் பக்கத்து வீட்டு சகோதரனாக இருக்கும் என எண்ணி “தம்பி… ஏன் இந்த நேரத்தில்….?” எனக் கேட்ட போதும் அதற்கும் பதிலளிக்காத வீட்டினுள் நுழைந்த நபர் திடீரென அப்பெண்ணின் முகத்தை துணி ஒன்றால் மறைத்துவிட்டு அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் வந்த பின்னர் தேடிப் பார்த்த போது வீட்டின் பின்புற கூட்டிலிருந்த எட்டு புறாக்களும் காணாமல் போயிருந்துள்ளது.
பின்னர் இது தொடர்பில் குறித்த பெண் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய திருடனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.