யாழ்ப்பாணம், சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதென மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 64 மற்றும் 56 வயதுடைய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் கொள்ளையிட்டமை தொடர்பிலும் தகவல்கள் இல்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.