ஆழ்வார்பேட்டை பாலம் அருகே பிரமாண்ட ஸ்டுடியோவில் இயங்குகிறது அனிருத்தின் இசை உலகம். ஷேவ் செய்யாத முகம், உறக்கம் கேட்கும் கண்கள்… அவரைப்போலவே ஸ்லிம்மான கோப்பையில் காபியுடன் வரவேற்கிறார் அனிருத்.
“2017-ம் ஆண்டுக்கான ப்ளான் போட்டாச்சா… உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். சென்னையில் எப்போது உங்கள் முதல் இசை நிகழ்ச்சி?”
“இந்த வருஷம் என்னோட முதல் ஆல்பம் அஜித் சாரோட `ஏ.கே 57′. அடுத்து, மோகன் ராஜா டைரக்ஷன்ல சிவகார்த்திகேயன் படம். அடுத்து விக்னேஷ் சிவன் டைரக்ஷன்ல சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, தெலுங்குல பவன்கல்யாண் படம்னு நான்கு படங்கள் பண்றேன்.
தமிழ், இங்கிலீஷ்ல மியூஸிக் ஆல்பம். பிப்ரவரியில் இருந்து ஒன் பை ஒன்னா ரிலீஸ் ஆகும். வேர்ல்டு டூர்ல ஜனவரி 21 சிங்கப்பூர். பிறகு… சென்னை. இங்கே முடிச்சதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பண்றோம். 2017-ல் என் திட்டம் இதுதான்”
`அனிருத், இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறார்; தனி ஆல்பங்களிலும் வேர்ல்டு டூரிலும்தான் கவனம் செலுத்துகிறார்’ என, ஏகப்பட்ட செய்திகள். சினிமாவுக்கு இசையமைப்பதைத் தாண்டி என்ன செய்ய விரும்புகிறீர்கள்?”
“வாழ்க்கையில் என்னோட லட்சியமே மியூஸிக் ஆர்ட்டிஸ்ட் ஆவதுதான். இந்தியன் மியூஸிக்கை குளோபல் மியூஸிக்கா மாற்றணும்.
என்னோட எல்லா படங்கள்லயும் யாரோ ஒரு இண்டிபெண்டென்ட் ஆர்ட்டிஸ்ட்டையோ, யூடியூப் ஆர்ட்டிஸ்ட்டையோ, வெளிநாட்டுக் கலைஞரையோ பார்க்கலாம்.
அந்த கொலாபரேஷன் எனக்குப் பிடிக்கும். அதை நோக்கித்தான் உலகம் நகருதுனு நினைக்கிறேன்.
எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவின் பிரபல இசைக்கலைஞர் டிஜே மேஜர் லாஸர், என்னை அடையாளம் கண்டுபிடித்து `இவரோடு ஒரு பாடல் பண்ணலாமே’னு எனக்கொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி அடுத்து நான் அங்கே என்ன பண்ணணுமோ, அதுதான் என் தேடலா இருக்கு.
`3′ படத்துல ஆரம்பித்து, இந்த அஞ்சு வருஷங்கள்ல 12 படங்கள் பண்ணியிருக்கேன். 100 டெஸ்ட் மேட்ச் ஆடி 10 சென்சுரி அடிக்கிறதைவிட, 10 டெஸ்ட் மேட்ச் ஆடி அதுல 7 சென்சுரி அடிச்சா அதுதான் எனக்கு திருப்தி.
நான் போட்டிபோடவேண்டியது என்னோட ஆல்பங்களோடு… அதைவிட பெட்டரா என்ன பண்ணப்போறோம்கிறதுதான் முக்கியம்.
தமிழ் மியூஸிஷியன்ஸுக்கு இது மாதிரி வேர்ல்டு டூர் அமையுறது ரொம்ப அபூர்வம். அமைவதை நான் பயன்படுத்திக்கிறேன்.
என்னதான் ஸ்டுடியோவில் உட்கார்ந்து சாங்ஸ் பண்ணி அது ஹிட்டானாலும், நம்ம ரசிகர்கள் முன்னாடி போய் அதை பெர்ஃபார்ம் பண்ணி, அவங்க நம்மகூடச் சேர்ந்து பாடும்போது கிடைக்கும் சந்தோஷம்தானே பெருசு! அதுக்கு இணை எதுவுமே கிடையாது.”
`வேதாளம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திலும் நீங்கள்தான் இசை. அஜித் என்ன சொல்றார்?”
“நான் அஜித் சார் ரசிகன். அவரோட ரசிகர்களுக்கு, காலத்துக்கும் மறக்க முடியாத பாட்டா இருக்கணும்னுதான் `ஆலுமா… டோலுமா…’ ரெடி பண்ணினோம். `கொலவெறி’க்கு அப்புறம் என் கரியர்லயே சக்சஸ்ஃபுல் பாட்டா அது அமைஞ்சது. மறுபடி `ஏ.கே 57′ பரபரப்பா ரெடியாகிட்டு இருக்கு.
அஜித் சார் மாதிரி ஒரு ஜென்டில்மேனைப் பார்க்கவே முடியாது. `வேதாளம்’ படத்துல வொர்க் பண்ணும்போதும் சரி… இப்பவும் சரி, அஜித் சார் ரொம்பவே என்கரேஜிங்கா பேசுவார். மியூஸிக்ல தலையிடவே மாட்டார்.
`வேதாளம்’ படத்துக்குப் பிறகு, அஜித் சார் ரசிகர்களோட எதிர்பார்ப்பு அதிகமாகிருக்கு. இந்த முறை வேற ஒரு களம். அதுலயும் ஜெயிச்சுக்காட்டுவோம். படத்தோட கதை, வெளிநாடு சம்பந்தப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி இருக்கும். இசையும் நிச்சயம் வித்தியாசமா, புதுசா இருக்கும்.”
“விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ரெண்டு பேரும் சக்சஸ்ஃபுல் ஹீரோவாகிவிட்டார்கள். நீங்கள் எப்போது..?”
` `3′ படத்தில் இருந்தே நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, `எனக்கு ஆர்வம் இல்லை’னு சொல்லி தவிர்த்திடுவேன்.
மூணு காரணங்களுக்காகத்தான் நான் படங்கள்ல நடிக்காம இருக்கேன்.
முதல் காரணம், எனக்கு நடிப்பு வராது. அடுத்து, அதுல எனக்கொரு பேஷன் இல்லை. ஒரு பாட்டு பண்றபோது எனக்குக் கிடைக்கும் சந்தோஷம், நிச்சயமா ஷூட்டிங் ஸ்பாட்ல கிடைக்காது.
மூன்றாவது, ஒரு நடிகரோட வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். இந்த அஞ்சு வருஷங்கள்ல நான் எதிர்பார்க்காத ஒரு இடம் கிடைச்சிருக்கு. அதைத் தக்கவெச்சுக்கிறதுதான் முக்கியம்.”
“இசையமைப்பாளரா உங்களுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் தனுஷ். ஆனால், இப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது இல்லையே. ஏன்?”
“என்னை மியூஸிக் டைரக்டர் ஆக்கணும்னு சொல்லி அறிமுகப்படுத்தினவர் தனுஷ்தான். ஆறு படங்கள்ல நாலு படங்கள் நாங்கள் சேர்ந்து பண்ணோம். எல்லாருக்கும் ஒரு சின்ன ஸ்பேஸ் தேவைப்படும். அந்த இடைவெளியை அனுமதிச்சுட்டு, திரும்பவும் வரும்போது அது இன்னும் அதிக இம்பேக்ட் கொடுக்கும். அதுக்கான ஒரு சின்ன க்ரியேட்டிவ் ஸ்பேஸ்தான் இது.
எங்களுக்குள்ள எந்தத் தவறான புரிதலும் இல்லை, சண்டையும் இல்லை. போன்ல பேசிக்கிறோம். வாட்ஸ்அப்ல சாட் பண்றோம். `வி.ஐ.பி-2’ல, என்னோட தீம் மியூஸிக்கை யூஸ் பண்றாங்க.
எங்களுக்குள்ள சண்டைன்னா, நான் அதை அனுமதிச்சிருக்கவே மாட்டேனே! `வி.ஐ.பி-2′ படத்தை தனுஷ் அறிவிச்சப்பக்கூட, என் பேரையும் சேர்த்துதான் போட்டார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ போட்டிருந்தா, இந்த மாதிரி கேள்விகள் வந்திருக்காதுனு நினைக்கிறேன்” சிரிக்கிறார்.
“சின்ன வயசுலேயே ஆண்ட்ரியா பிரேக்கப், பீப் சாங்னு உங்களைச் சுற்றி அதிக சர்ச்சைகள்…”
“நம்மள நாமளே கிள்ளிக்கிறோம்னு வெச்சுக்கோங்க, வலி எப்படித் தெரியும்? வலினு ஒண்ணை அனுபவிச்சாத்தான், சந்தோஷம்கிற ஒண்ணை உணர்வோம்.
முதல் சர்ச்சை வந்தபோது, நானும் நாலைஞ்சு நாளைக்கு அப்செட்டாத்தான் இருந்தேன். ஆனால், இப்ப எல்லாம் அது எனக்கு மரத்துப்போச்சு. டிசம்பர் மாசம் எப்படி சென்னைக்கு மோசமான மாசமா இருக்கோ, அதே மாதிரி எனக்கும் ஏதாவது வரும். நல்லவேளை இந்த வருஷம் அப்படி எதுவும் இல்லை. ரொம்ப க்ளீன். அடுத்த வருஷம் இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.”
“சத்யம் தியேட்டரில் `வி.ஐ.பி’ படம் பார்க்கப் போயிருந்தேன். `ஊதுங்கடா சங்கு…’ பாட்டு பசங்களுக்கான ஃபீல் சாங். அதுக்கு, காலேஜ் பொண்ணுங்க நாலு பேர் எழுந்து டான்ஸ் ஆடினாங்க.
`நாம ஏதோ ஒரு ஃபீலிங்ல யோசிச்சா, இவங்க தனியா ஃபீல் பண்றாங்களே’னு இருந்தது. அப்படி பிரேக்கப் ஆன உடனே, அந்த வலியோடு நான் போட்ட பாடல்தான் `சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை…’.
இதுவரைக்கும் நான் ரெண்டு ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கேன். ரெண்டுமே எனக்கு ரொம்ப சந்தோஷமானவை. ரெண்டு பேர்கூடவும் எனக்கு சண்டை கிடையாது. இப்பவும் பேசிக்கிறோம். ஆனால், கடந்த மூன்றரை வருஷங்களா நான் சிங்கிள்தான். என் லைஃப்ல யாரும் இல்லை.”
“அப்ப கல்யாணம்?”
“ஒரு மியூஸிஷியனைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம். என் சோஷியல் சர்க்கிளுக்கு அவங்களும், அவங்களோட சோஷியல் சர்க்கிளுக்கு நானும் மேட்ச் ஆகுறது ரொம்பக் கஷ்டம். எனக்குத் தெரிஞ்சு, எனக்கு கல்யாணமாகிறது கஷ்டம்தான்.”