நாட்டிலுள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களை இன்று முதல் இராணுவம் பொறுப்பேற்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதையடுத்து வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை இன்று காலை படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பொறுப்பேற்றுள்ளனர்.
இலங்கை பொற்றோலியக்கூட்டுத்தாபனத்தை அத்தியாவசிய தேவைக்குட்படுத்திய வர்த்தமானி அறிவித்தலையடுத்து இராணுவத்தினரிடம் பெற்றோல் விநியோகச் சேவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இனி வழமையாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று முதல் எரிபொருள் விநியோக நிலையங்களிலுள்ள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று படையினர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணிக்கு திரும்பாதோர் விலகியோர்; பவுசர்களுக்கு அழைப்பு
நேற்று (25) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகமானது, அத்தியவசிய சேவையாக வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளதால், அச்சேவை தொடர்பான அனைத்து பணியாளர்களும் தங்களது பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியவசிய சேவை ஒன்று பிரகடனப்படுத்தப்படுமிடத்து, உரிய சேவை தொடர்பில் பணிக்கு திரும்பாதோர், பணியிலிருந்து தானாக நீங்கிச் சென்றதாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் வழமைக்கு கொண்டு வந்துள்ளதால், குறித்த சேவை மற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் பவுசர்களை, உரிய எரிபொருள் களஞ்சியத்திற்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த பணியில் ஈடுபடாத தனியார் பவுசர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கம்பனிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு மற்றும் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய ஊழியர்களின் சங்கத்தினால் நேற்று முன்தினம் (24) நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பணி புறக்கணிப்பு தொடர்பில் நேற்று (25) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்ததோடு தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்திருந்தது.