பிரபாகரனுக்கே பயந்து ஓடாத நான் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பயந்து ஓடுவேனா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலனறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது; தேர்தலின் பின்னர் இரவு 12 மணிக்கு விமான நிலையத்தை மூடப்போவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். அப்படி மூடவேண்டியதில்லை. பிரபாகரனும் நாம் தப்பி ஓடுவிடுவோம் என நினைத்திருக்கலாம். அப்போதே தப்பி ஓடாத நான் இந்த சிறிசேனவுக்காக ஓடுவேனா? நான் இந்த நாட்டை விட்டுப் போகமாட்டேன்.இங்கேயே பிறந்தேன், இங்கேயே வாழ்வேன்.
இந்த எதிர்பார்ப்புகள் அவர்கள் காணும் கனவே. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. 8 ஆம் திகதி உங்களின் வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாகுவேன். அப்போது 9 ஆம் திகதி அந்தப் புத்தகத்தைக் குப்பைக் கூடையில் போடுவேன்.