பிரான்ஸில் 150 பேருடன் வீழ்ந்து நொறுங்கிய, ஜேர்மன் விங்ஸ் நிறுவன விமானத்தின் துணை விமானியான அன்ரீஸ் லுபிட்ஸின் காதலி கர்ப்பிணியாக உள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24 ஆம் திகதி ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரிலிருந்து ஜேர்மனியின் டஸல்டோவ் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் பிரான்ஸில் அல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதி நொறுங்கியதால் 144 பயணிகள் உட்பட 150 பேரும் உயிரிழந்தனர்.
விமானிகளின் அறையிலிருந்து தலைமை விமானி பற்றிக் சோண்டன் ஹெய்மர் வெளியில் சென்றிருந்த போது அவரை மீண்டும் உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிவிட்டு விமானத்தை செலுத்திய 27 வயதான துணை விமானி, அன்ட்ரீஸ் லுபிட்ஸ் வேண்டுமென்றே விமானத்தை சடுதியாக கீழிறக்கி அல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியரான துணை விமானி அன்ட்ரீஸ் லுபிட்ஸ், இவ்வாறான பயங்கர நடவடிக்கையை ஏன் மேற்கொண்டார் என்பது இன்னும் மர்மமாகவுள்ளது.
அவரின் வீடு மற்றும் பின்னணி குறித்த தகவல்களை ஜேர்மன் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில் அவர் பற்றிய பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
துணை விமானி அன்ட்ரீஸ் லுபிட்ஸ் யுவதி ஒருவரை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். ஆசிரியையாக பணியாற்றும் கெத்தரின் கோல்ட்பாச் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அன்ட்ரீஸ் லுபிட்ஸ் மூலம் கெத்தரின் கோல்ட்பாச் கர்ப்பமடைந்துள்ளாரென ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கெத்தரின் கர்ப்பமடைந்திருப்பதை விமான அனர்த்தம் இடம்பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே, இந்த ஜோடி கண்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அன்ட்ரீஸ் லுபிட்ஸின் செயற்பாடுகள் காரணமாக அவரின் காதலி கெத்தரின் அண்மைக்காலமாக அதிருப்தி கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
தனது காதலியான கெத்தரின் என்ன ஆடை அணிய வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்பது பற்றியெல்லாம் உத்தரவிடுவதற்கு லுபிட்ஸ் முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 7 வருடங்களாக காதலித்த இந்த ஜோடியினர் திருமணம் செய்வதற்கு முன்னர் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் அன்ரீஸ் லுபிட்ஸின் நடவடிக்கைகள் காரணமாக அச்சமமுற்ற கெத்தரின், அன்ட்ரீஸ் லுபிட்ஸிடமிருந்து விலகியிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டும் என தீவிர ஆர்வம் கொண்டிருந்தவர் அன்ட்ரீஸ் லுபிட்ஸ். இதற்காக பதின்மர் பருவத்திலிருந்து அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார்.
அவர் இறுதியாக பணியாற்றிய எயார்பஸ் ஏ320 விமானத்தை செலுத்துவதற்குத் தேவையான சகல சான்றிதழ்களையும் அவர் பெற்றிருந்தார்.
ஆனால், தனது ஆரோக்கிய குறைபாடுகளை அவர் அதிகாரிகளுக்கு மறைத்திருந்தார் என நம்பப்படுகிறது.
அவர் மன அழுத்தங்களுக்காக சிகிச்சை பெற்றிருந்ததுடன், பார்வை மங்கி வருவதையும் உணர்ந்திருந்தாராம்.
தலைமை விமானியாக பதவி உயர்வு பெற விரும்பியிருந்த அன்ட்ரீஸ் லுபிட்ஸுக்கு இந்த பார்வைக் குறைபாட்டின் காரணமாக விமானி வாழ்க்கையே விரைவில் முடிக்கு வரலாம் என்பதை உணர்ந்திருந்தாராம்.