மாஸ்கோ: தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயியான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ் என்பவர் சினையாக இருக்கும் தனது ஆடு எப்போது குட்டி போடும்..? என்று அந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்.
அந்த இனிய நாளும் வந்தது. அவரது வளர்ப்பு வெள்ளாடு போட்ட குட்டிகளில் ஒன்றின் முகத்தை பார்த்த அவர் திகைத்துப் போனார்.
தாடி வைத்த- பெரிய மூக்கு கொண்ட ஒரு கோபக்கார கிழவன் முறைத்து பார்ப்பதைப் போன்ற முக அமைப்புடன் பிறந்த அந்த குட்டியை கசாப்புக்கு கூட யாரும் வாங்க மாட்டார்களே.., என அவர் மனம் உடைந்துப் போனார்.
பிலாசியஸ் லாவ்ரெண்டிவ் வீட்டில் உள்ள ஆடு விசித்திர முகத்துடன் கூடிய குட்டியை ஈன்றுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து உள்ளூர் மக்கள் அதை காண திரண்டு வந்தனர். அவர்கள் மூலமாக இந்த செய்தி அக்கம்பக்கத்து ஊர்களுக்கும் பரவியது.
கருவுற்றிருந்த வேளையில் அந்த தாய் ஆட்டுக்கு வைட்டமின்-ஏ சக்தி நிறைந்த உணவு வகைகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் இந்த முக அமைப்பு உருவாகி இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த செய்தியை அறிந்து வந்து, அந்த வெள்ளாட்டுக்குட்டியை கண்ட ஒரு சர்க்கஸ் நிறுவன ஏஜெண்ட் சராசரி விலையை விட 10 மடங்கு விலை தந்து அதை வாங்கிக் கொள்வதாக உத்திரவாதம் அளித்துள்ளார்.
அவரது பேரத்துக்கு பிறகு அதை வாங்கிக் கொள்ள நான்- நீ என போட்டி போட்டுக்கொண்டு இன்றுவரை பலர் விலையை உயர்த்தி வருகின்றனர்.
எனினும், அந்த ஆட்டுக்குட்டியை விற்பது தொடர்பாக எந்த முடிவுக்கும் வராத பிலாசியஸ் லாவ்ரெண்டிவ், ’எனது அழகு ஆட்டுக்குட்டி யாருடைய சாப்பாட்டு மேஜையின் மீது இறைச்சியாக இருப்பதையோ, காட்சிப் பொருளாக மாறுவதையோ நான் விரும்பவில்லை’ என்று கூறி வருகிறார்.