நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளனர்.

19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில், சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தீவிர அக்கறை காண்பித்து வருகின்றனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தாலும், அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் அதனைத் தோற்கடிக்கவும் கங்கணம் கட்டியுள்ளனர்.

இந்தநிலையில், தனது கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார்.

இதன்படி, 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள் அடங்கிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19வது திருத்தச்சட்டம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே தினத்தில் பலப்பரிட்சை:  ​மகிந்த அணி தனியாக பேரணி?

12-04-2015

Untitled-10d64fdfdFஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிபிளவுபடக்கூடிய அச்சுறுத்தல் மேலோங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகின்றது.

கொழும்பு ஹைட்பார்க்கில் சுதந்திரக்கட்சியின் மே தினக்கூட்டத்தை கட்சியின் கணிசமான தொகையினர் பகிஷ்கரித்து மாற்று மே தினக்கூட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இது கட்சியை பெரியளவில் பாதிக்கலாமெனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

கட்சியில் மகிந்த ராஜபக்ஷ சார்புத் தரப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்திருக்கின்றனர். முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனம் எடுத்த தீர்மானத்துக்கமைய கிருலப்பனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுதந்திரக்கட்சி ஆசிரியர் சங்கச் செயலாளர் வசந்த ஹந்த பான்கொட தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹைட்பார் மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்ஷன நேரில் சென்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுத்த போதிலும், அக்கூட்டத்தில் மகிந்தா பங்கேற்காது கிருலப்பனை கூட்டத்தில் பங்கேற்கத் தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அந்த மேதினக் கூட்டத்தில் பங்கேற்பதென சுதந்திரக்கட்சி தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருப்பதாகவும் அறிய வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கவிருக்கும் சுதந்திரக்கட்சி மே தினக்கூட்டத்தை பகிஷ்கரித்து மாற்றுக் கூட்டத்தில் கலந்து கொள்வோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி உயர்மட்டம் மேற்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகப்பிளவுபடலாமெனவும் மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தனியாக இயங்கக்கூடிய நிலை ஏற்படலாமெனவும் விரைவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த சில கட்சிகளுடன் இணைந்து தனித்து களமிறங்கலாமெனவும் அறிய வருகின்றது.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் சுதந்திரக்கட்சி பிளவுபட்டு தேர்தலில் இரண்டு பக்கமாகப் போய்விடலாம். அது கட்சியை தேர்தலில் பின்னடைவுக்குக் கொண்டு செல்லலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியையும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் சந்தித்துப் பேசிய இவர்கள், கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் கடும் தொனியில் கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

கட்சியை பலவீனப்படுத்த முனைவோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர் எனவும், எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கிறார்.

Share.
Leave A Reply