உலகிலேயே அதி பயங்கரமான இயக்கம் இதுதான் என்று சொல்லப்படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்தாதி இறந்துவிட்டாராம்…
இந்தச் செய்தியை முதலில் சொன்னது ஈரான் நாட்டு ஒரு வானொலியாம். அதன்பிறகு பல சர்வதேச ஊடகங்களும் இதே செய்தியை வெ ளியிட்டிருந்தன.
ஆனால் இது பற்றி ஐ.எஸ்.ஸோ இன்றும் வாய் திறக்கவில்லை.
அமெரிக்க விமான குண்டு வீச்சில் படுகாயம் அடைந்த ஐ.எஸ். இயக்க நிறுவுனர் அல் பக்தாதி அதன்பிறகு உயிரிழந்ததாகத்தான் சொல்கிறார்கள்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். இயக்கம் இயங்கி வந்தது. இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
அவர்கள் உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஸுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது.
இந்நிலையில், ஈராக்கில் கடந்த மாதம், அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். இயக்க நிறுவுனர் அபூ பக்கர் அல் பக்தாதி படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
இங்கிலாந்து நாட்டு பத்திரிகை ஒன்று இச்செய்தியை வெளியிட்டிருந்தது.
ஈராக் அரசு ஆலோசகர் ஹிஷாம் அல்–ஹஷிமி என்பவரும் இச்செய்தியை உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் 18ஆம் திகதி, சிரிய எல்லையை ஒட்டியுள்ள அல்–பாஜ் கிராமத்தில் ஒரு குழுவுடன் தங்கி இருந்தபோது, அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் அல் பக்தாதி படுகாயம் அடைந்ததாக அவர் கூறினார்.
தொடக்கத்தில், அல் பக்தாதியின் உயிருக்கு ஆபத்தான அளவுக்கு காயம் இருந்தது. ஆனால், அப்போதிருந்து அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார்.
இருப்பினும், ஐ.எஸ். இயக்கத்தின் அன்றாட பணிகளை நிர்வகிக்கும் அளவுக்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த அல்-பக்தாதி தற்போது பலியாகினார் என்று ரேடியோ ஈரான் அறிவித்தது.
ஆனால் எந்த ஒரு செய்தி நிறுவனத்தாலும் இது உறுதி செய்யப்படவில்லை.
வெளியில் அதிகம் முகம் காட்டாமல் இருந்த அல்–பக்தாதி ச மொசூல் நகர மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த வருடம் முதல் முறையாக கலந்து கொண்டு பேசினார். முதல் முறையாக வெளியான அந்த வீடியோ, இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்–ஜவாஹிரி.
இரண்டாவது இடத்தில் இருப்பவர் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபூபக்கர் அல்-பாக்தாதி தான்.
அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறார் இவர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தலைமை தாங்கிய 43 வயதான அல்–பக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை அதிகமாக வெளிக்காட்டியது கிடையாது. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பாராம்.
இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறினர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சமரா என்ற இடத்தில் கடந்த 1971ஆம் ஆண்டில் பிறந்த இவர், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றவர்.
அமெரிக்க படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சில சிறிய தீவிரவாத குழுக்களுக்கு அல்–பக்தாதி தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது.
2006ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்–பக்தாதி பின்னர் 2009ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.
பக்கா என்ற இடத்தில் அமெரிக்க இராணுவ முகாமிலும் சிலகாலம் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். விடுதலைக்கு பிறகு ஒசாமா பின்லேடனின் அல்–கொய்தா இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
அல்–கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டது அந்த இயக்கத்துக்கு பேரிடியாக அமைந்தது.
இதனால் கொதித்து எழுந்த அல்–பக்தாதி, பழிக்குப்பழி வாங்கப் போவதாக அறிவித்தார். அதன்பிறகு ஈராக்கில் நடந்த சில தாக்குதல்களுக்கு அவரது தலைமையிலான குழு பொறுப்பு ஏற்றது அதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
எதிரிகளை கொடூரமாக தாக்கி கொல்வதோடு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அதிபயங்கர போக்கை கொண்டவர் அல்–பக்தாதி.
இதனால் இவருக்கும், பின்லேடனின் மறைவை தொடர்ந்து அல்–கொய்தாவின் தலைமை பொறுப்பை ஏற்ற அல்–ஜவாஹிரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிளவு அதிகரிக்கவே, அல்–ஜவாஹிரியை பின்பற்றப் போவது இல்லை என்றும், இறைவனின் கட்டளையை பின்பற்றி நடக்கப்போவதாகவும் அறிவித்த அல்–பக்தாதி, ஈராக்கையும், சிரியாவையும் ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்தை தொடங்கினார்.
தற்போது இந்த இயக்கத்திடம் ரூ.24 ஆயிரம் கோடிக்கு மேல் பணமும், சொத்துகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. உலக நாடுகளுக்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்திய இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். தான்.
அல்-பாக்தாதி உயிரிழப்பு அமெரிக்க படைக்கு முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.
அல்பக்தாதி உயிரிழந்தது உண்மைதானா? என்பது பெரிய கேள்விக்குறி.
ஒருவேளை ஐ.எஸ். தலைவர் இறந்திருந்தால் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்திருக்கும்.
காரணம் சாதாரணமாகவே பயங்கரச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் தலைவனை கொன்றுவிட்டார்கள் என்றால் அவர்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன-?
-எஸ்.ஜே.பிரசாத் –
(முன்னைய பதிவுகளை பார்வைிட இ்ங்கே அழுத்தவும: எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி)