கிளிநொச்சி பழைய முறுகண்டி கொக்காவில் – பனிக்கன் குள பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதிய பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான ஜெகநாதன் உதயஜோதி மற்றும் 29 வயதான தோமஸ் சாள்ஸ் நெரஞ்சன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 18 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாரதி நித்திரை கொண்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, இவ்விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சில ஊடகங்கள் பொய் தகவல்களை வெளியிட்டு வருகின்றது. உண்மையில் இதுவரை இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.