மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் கொம்மாதுறை என்னுமிடத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை பாலசுப்பிரமணியம் சதுக்கத்தைச் சேர்ந்த கலையரசி பாலச்சந்திரன் (வயது 58) எனும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய ஆசிரியையே விபத்தில் பலியானவர் என்று செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

asiriyarவழக்கம் போல் குறித்த ஆசிரியை சனிக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் நெடுஞ்சாலையின் ஓரமாக உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிரே வந்த கென்ரனர் ரக வாகனம் எனது மனைவியை மோதிவிட்டு தப்பிச் சென்றது என கொல்லப்பட்ட ஆசிரியையின் கணவர் பாலச்சந்திரன் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தலையிலும் காலிலும் காயம்பட்டு வீதியில் வீழ்ந்த ஆசிரியை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற மர்ம வாகனத்தைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

Share.
Leave A Reply