140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்று கூறி முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு வாக்குகள் எண்ணும்  நிலையத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை வெளியேறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வி அடைய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆசனம் கிடைத்துள்ளது.

இதை அடுத்து இங்கு வாக்குச்சீட்டுக்கள் கட்டப்பட்டுள்ளதை  ஒருமுறை  பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வாக்குகள் எண்ணும் உத்தியோகஸ்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாக்குச்சீட்டுக்களை பரிசீலனை செய்யுமாறு பணித்தார்.

வாக்குச்சீட்டுக்கள் பரிசீலிக்கப்பட்டன. பின்னர் வெளியில் வந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்று கூறி வாக்குகள் எண்ணும் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இதன்போது, அவருடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அந்தக்கட்சியின் வேட்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் இ.சாணாக்கியன் ஆகியோரும் அவரின் ஆதரவாளர்களும் வெளியேறினர்.

Share.
Leave A Reply