மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போன்று, வடக்கு மாகாணசபையில் ஏற்பட்ட பெருங் குழப்பம், பல்வேறு தலையீடுகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் அவ்வப்போது எழுந்து கொண்டேயிருக்கின்றன.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற பிரச்சினை மாத்திரம் தீர்க்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கு அடிப்படைக் காரணியான பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதில் முக்கியமானது, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாக நடத்தப்பட வேண்டிய புதிய விசாரணை.
சுகாதார மற்றும் போக்குவரத்து அமை ச்சர் ஆகியோர் தொடர்பாக, முறைப்பாட்டாளர்கள் வராமையைக் காரணம் காட்டி, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று முன்னைய விசாரணைக் குழு கூறியிருந்தது.
ஆனாலும், புதிய முறைப்பாடுகள் வந்திருப்பதைக் காரணம் காட்டியும், முன்னைய விசாரணைக் குழு முன் தம்மால் முன்னிலையாக முடியவில்லை என்றும் புதிய விசாரணைக் குழு முன்பாக ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயார் என்றும், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியதைக் கருத்தில் கொண்டும், குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து புதிய விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த விசாரணைக் குழுவை எதிர்கொள்வதற்காக, ஒரு மாதத்துக்கு, கட்டாய விடுப்பில் செல்லுமாறு சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டதையடுத்தே பிரச்சினை பூதாகர வடிவெடுத்தது.
கடைசியில், அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பாமல், விசாரணையை முன்னெடுக்க இணக்கமும் காணப்பட்டது.
இப்போது அமைச்சர்கள் டெனீஸ்வர
னும், சத்தியலிங்கமும், முதலமைச்சர் அமைக்கும் விசாரணைக் குழுவின் முன் பாக தாம் முன்னிலையாகி விளக்கமளிக் கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
முதலில் டெனீஸ்வரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை நாசூக்காக கூறியிருந்தார். அதனைப் பலரும் விளங்கிக் கொள்ளவில்லை. ஆனால், ஆங்கில ஊடகத்துக்கான அவர்களின் செவ்வியில், அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
அமைச்சர்களை விசாரிக்கும் விசாரணைக் குழுவை அமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும், மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றே அவ்வாறு விசாரணை நடத்தலாம் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.
மாகாணசபைகள் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், 13ஆவது திருத்தச்சட்டம் போன்றவற்றை அவர்கள் ஆதாரமாக காட்டியுள்ளனர்.
ஏற்கனவே விசாரணை நடத்திய, ஓய்வு பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமை யில், 4 பேர் கொண்ட புதிய விசாரணைக் குழுவை முதலமைச்சர் நியமித்திருப்பதாக வெளியாகிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தான், அமைச்சர்கள் இருவரும் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், முன்னைய விசார ணைக் குழு சரியாகச் செயற்பட்டதா,- அதன் அறிக்கை எந்தளவுக்கு நியாயமானது என்பன தொடர்பில் பலத்த விவாதங் கள் இருக்கின்றன.
முதலமைச்சர் கூட இந்த விடயத்தில் தடுமாறித் தான் போயிருக்கிறார். விசாரணைக் குழு சரியாகவே செயற்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசனின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
விசாரணைக்குழு நியாயமாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் ஏற்காவிடினும், அதே விசாரணைக் குழுவினால், ஐங்கரநேசன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, அவர் மீளாய்வு செய்யலாம் என்று கூறியிருப்பது அவரது தடுமாற்றத்தைக் காட்டுகிறது.
இவ்வாறான நிலையில், மீண்டும் நீதி பதி தியாகேந்திரன் முன்னிலையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டால் அதுகுறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
அதேவேளை, முதலமைச்சருக்கு இவ்வாறான விசாரணைக் குழுவை அமைக்கும் அதிகாரங்கள் இல்லை என்ற வாதத்தை அமைச்சர்கள் டெனீஸ்வரனும், சத்தியலிங்கமும் கிளப்ப முனையும் போது, அவர்கள் விசாரணைக்குப் பயப்படுகிறார்களோ என்ற சந்தேகம் மக்கள் முன் எழுவது இயல்பு.முதலமைச்சருக்கு இவ்வாறான விசாரணைக்குழுவை அமைக்கும் அதிகாரம் இல்லை என்றும், அவர் விசாரணைக் குழுவை அமைத்தது தவறு என்றும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் முன்னர், கூறியிருந்தார்.
இருந்தாலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த ஞாயிறன்று வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், தமக்கு அந்த உரிமை இருப்பதாக நியாயப்படுத்தியிருக்கிறார்.
“தமது அமைச்சர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை முதலமைச்சர் ஒருவருக்கு இருந்தால், தேவைப்பட்டால் அவர்களை வெளியேற்றுவதற்கும், அவர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தவும் முடியும்.
தம்முன் கொண்டு வரப்பட்ட விடயங் களை ஆராய்ந்து விசாரணைக் குழு எனக்கு ஆலோசனை தெரிவித்தது. அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. அதைவிட விசாரணைக் குழு தமது அறிக்கையை வெளியிடும் வரையில், விசாரணைக் குழு
வுக்கோ, அந்தக் குழுவை நியமித்த போ.ேதா, உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.” என்றும் அவர் கூறியிருந்தார்.
விசாரணைக் குழுவை முதலமைச்சர் அறிவித்த போது, அதனை எதிர்க்காமல் விட்டதும், அந்த விசாரணைக் குழுவில் இருந்தவர்கள் பற்றிய விடயங்களை முதலமைச்சரின் காதுக்கு கொண்டு செல்லாமல் விட்டதும் சபை உறுப்பினர்களின் தவறு தான்.
இரண்டு அமைச்சர்களும் முதலில் இழைக்கப்பட்ட தவறு மீண்டும் நிகழக்கூடாது என்கின்றனர். தமது சிறப்புரிமையை மீறாத வகையில், அவை உறுப்பினர்க ளைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். இது சரியானது தான்.
ஆனால், முதலமைச்சரோ, ஏற்கனவே ஒரு விசாரணைக்குழுவை தமது தற்துணிவின் பேரில் அமைத்த துணிச்சலில், மீண்டும் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் அமைக்கும் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்ற நிலையில், அவர்கள் ஒத்துழைக்காவிடினும் விசாரணை நடக்கும் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தக் கட்டத்தில், வட மாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி ஒரு பிரேரணையை பேரவைச் செயலகத்தில் கையளித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஐந்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தெரிவுக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்பதே அந்தப் பிரேரணை.
இது, முதலமைச்சருக்கு வைக்கப்படும் அடுத்த செக். மீண்டும் ஒரு விசாரணைக் குழுவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைப்பதை தடுப்பது இந்தப் பிரேரணையின் முதல் இலக்கு.
இரண்டாவது இலக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கீழ் உள்ள அமைச்சு தொடர்பாக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவது.
இந்தப் பிரேரணையை, இந்தவாரம் நடக்கவுள்ள மாகாணசபை அமர்வில், , பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவர் முன்வரும் சாத்தியங்கள் இருக்கின்றன.
அதுமாத்திரமன்றி, இந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை ஆதரவும் கிடைக்கலாம். முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அது வேறு விதமாக பார்க்கப்படும்.
முதலமைச்சருக்கு எதிரான அணியினர், அவரிடம் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக, அத்தகைய எண்ணம் இல்லாவிடினும், இப்போது அத்தகைய எதிர்பார்ப்பு முதலமைச்சருக்கு எதிரான அணியினரிடம் காணப்படுகிறது.
முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான அறிக்கையை அமைச்சர்கள் வாரியத்தில் சமர்ப்பிக்கவில்லை, இரட்டை நகர உடன்பாடுகளுக்கு அமைச்சர்கள் வாரியத்தில் அனுமதி பெறவில்லை, அமைச்சர்கள் வாரியத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே வல்வெட்டித்துறை நகரசபை கலைக்கப்பட்டமை, மற்றும் முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள உள்ளூராட்சி அமைச்சின் கீழ் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக இப்போது குற்றச்சாட்டுகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்குடன் முன்வைக்கப்படுகிறதா அல்லது உண்மையானவையா என்பது விசாரணை ஒன்றின் பின்னர் தான் தெரிய வரும்.
கடந்த 26ஆம் திகதி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில், “என் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனையும் சமர்ப்பிக்குமாறு நான் முன்னரே கூறியிருந்தேன்.
ஏனென்றால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். இப்போதும் சொல்கிறேன், என்மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர்கள் அமைக்கும் சுதந்திரமான விசாரணைக் குழுவை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர், விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
முன்னதாக அமைச்சர் டெனீஸ்வரனும் கூட, தான், எந்த விசாரணைக் குழுவையும் எதிர்கொள்ளத் தயார் என்று தான் கூறியிருந்தார். இப்போது அவர் தெரிவுக்குழுவை அமைத்தால் தான் ஒத்துழைப்பேன் என்கிறார்.
அதேவேளை, முதலமைச்சரும் சுதந்திரமான விசாரணைக்குழுவின் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார்.
இங்கு யாருக்குமே விசாரணைக் குழுவை எதிர்கொள்வதோ, விசாரணைக்குழு யார் என்பதோ பிரச்சினையாகத் தெரியவில்லை.
தமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் தான் இந்த விடயத்தில் சிந்திக்க முனைகின்றனர்.
எவ்வாறாயினும், விசாரணைக் குழுவொன்றை அமைக்கும் அதிகாரம், முதலமைச்சருக்கு இருக்கிறதா என்ற விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றாலோ, விசாரணைக் குழுவுக்கு எதிராக அல்லது அதன் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றாலோ, அதன் பாதிப்பு, முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ, சபை உறுப்பினர்களுக்கோ வரப் போவதில்லை.
ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சருக்கு எதிரானதாக அமைந்தால், அது மாகாணசபையின் அதிகாரங்களுக்கு கட்டுப்போடுகின்ற ஒரு நகர்வாகவே முடிந்து போகும்.
இந்த விடயத்தில் நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்படத் தவறினால் அதன் விளைவுகளை, வடக்கு மாகாணசபை காலம் பூராகவும் அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
என்.கண்ணன்