கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் ஒரு மாத காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமையை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 20ம் தேதி முதல் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், மக்களின் வாழ்க்கை நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் நோக்குடன் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பிலும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு சட்டம் 20ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்தும் மீள் அறிவிப்பு விடுக்கப்படும் வரை குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கேகாலை மற்றும அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அலவத்துகொடை, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் குறித்த பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் 8 மணிக்கு நாளாந்தம் மீள் அறிவித்தல் வரை அமல்படுத்தப்படவுள்ளது.

இவை தவிர்ந்த இதர பொலிஸ் பிரிவுகளில் 22ம் திகதி முதல் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் தினமும் இரவு 8 மணிக்கு அமலாகும்.

இதன்படி பண்டாரகம, பயாகல, பேருவளை, அழுத்கம, புத்தளம், மாரவில, வென்னப்புவ, ஜா-எல, கொச்சிக்கடை, சீதுவை, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியாவ, வெல்லம்பிட்டி, கல்கிஸை, தெஹிவளை, கொ{ஹவல, அலவத்துகொட, அக்குறணை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரத்தியேக வகுப்புகள், சினிமா தியேட்டர்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது. ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் இயங்கவுள்ளன.

பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சனையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டிற்கு கீழுள்ள அதேபோன்று நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் நிலைமை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை. அதனால் வைரஸ் பரவாத விதத்தில் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும், பொறுமையுடனும் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் தொழிலுக்கு செல்வோரை தவிர ஏனையோரை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் அவசரப்பட்டு ஒரே தருணத்தில் அனைவரும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போதிலும் மாவட்டத்தை விட்டு வேறொரு மாவட்டத்திற்கு தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே பயணிக்க முடியும்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே பிரதான வீதிகளை பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply