கோப்பாயில் ஊரடங்கு வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளையிட்ட இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலி, கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில், தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் கொள்ளைகள் இடம்பெற்றன.
வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி காயப்படுத்தி, பணம், நகை, சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது.
இது தொடர்பாக, யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள் ,வாள் திருட்டுப்போன கோடரி சைக்கிள்,திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடையவர்கள் என்றும், மல்லாகம் மற்றும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், தெரிவித்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.