சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டமை ஆச்சரியத்தையளித்துள்ளது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் 79 வயதான பெண் வாங். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இவரை அவரது மகன் மா (58) கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மா, தனது தாயை சக்கர நாற்காலியில் அமரவைத்து வீட்டிலிலிருந்து அழைத்து சென்றார். அதன் பிறகு மா, மட்டும் தனியாக வீட்டுக்கு திரும்பினார். இது பற்றி மாவின் மனைவி ஜாங் அவரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை.

 

இந்த நிலையில் 3 நாட்கள் ஆகியும் தனது மாமியார் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஜாங், இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

அதனை தொடர்ந்து மாவை பொலிஸார் விசாரித்தபோது, அவர் தனது தாயை உயிருடன் புதைத்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக வாங், புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு சரிவர மூடப்படாத குழியில் இருந்து பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் அந்த இடத்தை தோண்டியபோது, குழிக்குள் வாங் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்த பொலிஸார் மா, மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், புதைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Share.
Leave A Reply