உலகம் முழுவதும் சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவும் அபாயம் இருப்பதாக கூறிய கருத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெரும் விஸ்ரூபம் எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சத்தைக் கடந்துள்ளது. 5.57 லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபரை தொடுவதன் மூலமும் அவர்களின் சளி மற்றும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்பதனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து தனிமனித இடைவெளி கடைபிடிக்கவும், முகக் கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவாது என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் தற்போது காற்றின் மூலம் பரவும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் குழுவினர் உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை அளித்துள்ளனர்.
“காற்றின் மூலம் பரவும் கொரோனா” : விஞ்ஞானிகள் அறிக்கையை ஏற்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலகம் முழுவதும் சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவும் அபாயம் இருப்பதாகவும், அதற்கான ஆதரங்களையும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையை கருத்தில் கொண்ட உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் அனைத்தும் மருத்துவ பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஜெனீவாவில் நடத்த சுகாதாரக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் முன்னணி மருத்துவர் பெனிடெட்டா அலிகிரான்ஸி, கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள் உண்மைதான் என்றும் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை நம்புவதாகவும் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் இத்தகைய அறிவிப்பு உலக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

