பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
அவருக்குத் தொடர்ந்து எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பா விரைவில் வீடு திரும்புவதற்கு ஆர்வமாக உள்ளார் என நேற்றுமுன்தினம் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்.
ஆனால், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எம்.ஜி.எம். மருத்துவமனை நேற்று வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.