பெற்றோரால் பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் காதல் ஜோடியைச் சேர்ந்து வாழ அனுமதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின்படி, நீதிபதி கே. வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்த ஆட்கொணர்வு மனுவில் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஆலுவா பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆதிலா நசரினின் ஆட்கொணர்வு மனு விசாரணையில், முதலில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அவருடைய காதலியான ஃபாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, தனது காதலி அவரது குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்டதாக ஆதிலா குற்றம் சாட்டியிருந்த காரணத்தால், ஃபாத்திமா நூரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மே 23-ஆம் தேதியன்று காவல்துறையில் ஃபாத்திமாவை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டதாக ஆதிலா புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இருவரையும் சேர்த்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த ஃபாத்திமா நூராவின் தாய், மே 24-ஆம் தேதியன்று அவரை அதிலாவின் வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இதைத் தொடர்ந்து அதிலா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைப் பதிவு செய்தார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, ஆதிலா நசரின் மற்றும் ஃபாத்திமா நூரா இணைந்து வாழ அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.

