பெண் தாதாவுடன் காவலர் ஒருவர் ரொமன்ஸ் செய்யும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (30). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராகவும், திமுக கட்சியின் வார்டு செயலாளருமாகவும் பணியாற்றி வந்த நிலையில், முன்விரோதம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் , குன்றத்தூர் முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதியும், பெண் தாதாவுமான எஸ்தர் (எ) யோகேஸ்வரி என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.
இவருடன் தாம்பரம் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தின் ஐஎஸ் எனப்படும் உளவு பிரிவு காவலர் மாதவன் என்பவர் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில் உளவுத்துறை காவலர் மாதவன், பெண் தாதாவான எஸ்தர்(எ) யோகேஸ்வரியிடம் செல்போனில் கீழ்க்கண்டவாறு பேசியுள்ளார்.
கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல ரௌடி சச்சினை யாரும் பிடிக்க முடியாது. அவன் போலீசின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டவன், எனக் கூறியுள்ளார்.
மேலும், மாதவன் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக பேசியதும், எஸ்தர் (எ) யோகேஸ்வரி, உளவுத்துறை காவலரிடம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?
நீ என்னை எவ்வளவு லவ் பண்ற? என கேட்பதும், நீ என்னிடம் வீடியோ கால் பேசும் போதெல்லாம் நீ உடலில் உடையில்லாமல் இருக்கிறாய் என மாதவன் கூறுவது மட்டுமல்லாது, நீ வீடியோ காலில் என்னோடு பேசு என உளவுத்துறை காவலர் கூறுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என போற்றப்படும் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பது மிகவும் அவசியம்.
அப்படிப்பட்ட நிலையில், குற்றங்களை முன்கூட்டியே அறிந்து காவல்துறை கமிஷனருக்கு தகவல் அளிக்கக்கூடிய முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு காவலரே, குற்றவாளி திறமையானவன், அவனை போலீஸ் பிடிக்க முடியாது எனக் கூறுவதும், பல்வேறு கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பெண் தாதாவிடம் கொஞ்சி குலாவுவதும், காவல் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை கெடுக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
அதோடு, ரவுடிகளுக்கு காவல்துறையினர் சாதகமாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

