நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றி தன்னைக் கைது செய்த பொலிஸார் தன்னைக் கைது
செய்ததற்கான ரசீதையும் தனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தான் குறித்து ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
தனது பாதுகாப்புக்கு ஏற்றதாக கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) எழுப்பிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையிலேயே
மேற்கண் விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜூன் 2ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எனது
ஒத்துழைப்பை வழங்குமாறு மருதங்கேணி சம்பவத்தை தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி மாலை சுமார் 3.30 மணியளவில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி என்னைத் தொடர்பு கொண்டார் கோரினார்.
அப்போது நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்லும் வழியில் இருந்தேன். இதனால் ஜூன் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் திரும்பி அதனை செய்வதாக கூறினேன்.
இதன்படி ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வாக்குமூலம் வழங்குவதாக
கூறியிருந்தேன்.
இந்த உறுதிமொழிகள் இருந்த போதிலும் மருதங்கேணி பொலிஸார்
கொள்ளுப்பிட்டி பொலிஸாரின் ஊடாக ஜூன் 6 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் என்னிடம் எழுத்து பூர்வ அறிவித்தலை அனுப்பினர்.
ஜூன் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் என்னை ஆஜராக வேண்டும் என்றனர். குறித்த தகவல் சிங்களத்தில் இருந்ததால் அதனை ஏற்கவில்லை.
பின்னர் ஜூன் 6 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது கொழும்பு வீட்டுக்கு வந்தனர். குறித்த அறிவித்தலை தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வழங்கினர்.
இவ்வாறான நிலைமையில் ஜூன் 7 ஆம் திகதி காலை என்னை கைது செய்ய வந்தனர்.
பிடியாணை எதுவும் இல்லை. இவ்வாறான நிலைமையில் கைது செய்வது எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகும். பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்காது என்னைக் கைது செய்தனர்.
இது தொடர்பில் சபாநாயகரிடம் பேசி தொலைபேசியை வைத்தவுடன், என்னைக் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் பிடியாணை உள்ளதா என்று கேட்டேன். ஏதும் இல்லை என்றே கூறினர்.
மேலும் என்னை கைது செய்ததற்கான காரணம் உள்ளிட்டவை அடங்கிய ரசீ தை எனது
குடும்பத்தினரிடம் வழங்குமாறு கேட்டேன். அதனையும் வழங்கவில்லை. ரசீது பின்னர்
கொள்ளுப்பட்டி பொலிஸில் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு எனது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எனக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் பொலிஸ் பேச்சாளர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார்.
இந்த அறிக்கைகள் அனைத்தும் பொலிஸ் விசாரணையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளன ” என்றார்.

