மினுவாங்கொடையில், பெண்ணொருவரின் தலைமுடியில் பூசப்பட்ட திரவங்களால் தலைமுடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் சலூன் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என மினுவாங்கொடை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நுகர்வோர் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர், கடந்த (30ஆம் திகதி) தலை முடியை சீர்செய்வதற்காக மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையம் ஒன்றிற்குச் சென்றறுள்ளார்.

இதன்போது, அவருடைய தலை முடிக்கு போடப்பட்ட சில தைலம் போன்ற இரசாயன திரவங்களால் குறித்த பெண்ணுக்கு முதலில் ஒவ்வாமை ஏற்பட்டு தலை முடியை கழுவியுள்ளார்.

இதன்போது அவரது தலைமுடி அனைத்தும் உதிர்ந்துள்ளது. இது தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் சம்பவம் அறிக்கையிட்டதன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதுதொடர்பான சம்பவத்தின் பின்னர் சலூனின் உரிமையாளரும் அவரது உதவியாளர்களும் சலூனை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களது வீடுகளை சோதனையிட்ட போது அவர்கள் வீடுகளை விட்டு ஓடி ஒளிந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply