“இறக்கும் தருவாயில் கலைஞரை பார்க்க வேண்டும் என எம்.ஜி.ஆர் விரும்பினார். எனவேதான் மறுநாளே அவரை ‘close’ செய்து விட்டார்கள்”
`அ.தி.மு.கவை, தி.மு.கவுடன் இணைத்திருப்பார்’
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான உறவு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அப்போது அவர், “மேலும் இரண்டு நாள்கள் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் அ.தி.மு.கவை, தி.மு.கவுடன் இணைத்திருப்பார். இறக்கும் தருவாயில் கலைஞரை பார்க்க வேண்டும் என விரும்பினார். எனவேதான் மறுநாளே அவரை ‘close’ செய்து விட்டார்கள். அன்றைய தினம் கலைஞர் நேரடியாக அங்கு சென்றார். நாள்முழுவதும் தலைவருடன்தான் (கருணாநிதி) நான் இருந்தேன். அப்போது தலைவர் (கருணாநிதி) அழுதுகொண்டு சாப்பிடாமல் இருந்தார்.
முன்னதாக அ.தி.மு.கவை, தி.மு.கவுடன் இணைப்பது குறித்து எம்.ஜி.ஆரிடம் பேசிய பட்நாயக், “முதல்வர், பொதுச்செயலாளர் என இருக்கும் பதவிகளை ஆளுக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளுங்கள். கட்சியை இணைத்துவிடலாம்” என்று ஆலோசனை சொன்னார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த எம்.ஜி.ஆர், “ஆட்சி நடத்துவதுதான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அதை அவரிடம் (கருணாநிதி) கொடுத்துவிடுகிறேன். பொதுச்செயலாளர் வேலையை அவர்தான் (கருணாநிதி) பார்ப்பார். பெயருக்கு அந்த பொறுப்பை நான் வைத்துக்கொள்கிறேன்” என்றார். அதற்கு கலைஞர், “எம்.ஜி.ஆர் ஒன்றும் அலெக்சாண்டர் இல்லை. நான் ஒன்றும் போரஸ் மன்னன் இல்லை” என தெரிவித்துவிட்டு எழுந்து வந்துவிட்டார்” என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலலில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “1980-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் எம்.ஜி.ஆர் தோல்வியை சந்தித்தார். பிறகு நடந்த திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது குமரி அனந்தன், “மருதுபாண்டியர்கள் வாழ்ந்த பூமியில் மண்டியிடலாமா?” என எம்.ஜி.ஆரை பார்த்து கேட்டார். மத்திய அரசுக்கு பணிந்துதான் இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு எம்.ஜி.ஆர் சென்றார். கலைஞருடன் கூட்டணி வைத்து மூப்பனார் வெற்றிபெற்றார். மீண்டும் தேர்தல் வந்தால் தோற்கநேரிடும் என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியும்.
கடந்த 1986-ம் ஆண்டு தேர்தலை காங்கிரஸ், அ.தி.மு.க இணைந்து சந்தித்தன. ஆனாலும் தி.மு.க வெற்றிபெற்றுவிட்டது. இதனால் நகர்ப்புறங்களில் கலைஞருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து தேர்தல்களை எம்.ஜி.ஆர் நடத்தவில்லை. இந்தசூழலில்தான் காங்கிரஸுடம் இணைந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவும் சில இடர்பாடுகளை கொடுத்தார். மறுபக்கம் மூப்பனாரின் நெருக்கடியும் இருந்தது. இதற்கிடையில் அ.தி.மு.க-வுக்குள் முக்கிய முடிவுகளை ஆர்.எம்.வீரப்பன் எடுத்தார். இதுபோன்ற பிரச்னைகளின் காரணங்களினால் தி.மு.க-வுடன், அ.தி.மு.க-வை இணைக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் விரும்பினார்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “சென்னையில் பட்நாயக் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் நானும் ஒருவர். இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்திராவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அப்படிதான் அவர் தமிழகத்துக்கு வந்திருந்தார். சேப்பாக்கத்தில் இருக்கும் விருந்தினர் மாளிகையில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஒன்றுபட்ட தி.மு.க-வுக்கு தலைவர் கலைஞர்தான் என எம்.ஜி.ஆர் தெரிவித்துவிட்டார்.
மறுபக்கம் முதல்வராக எம்.ஜி.ஆர் இருப்பதற்கு கலைஞர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார். அ.தி.மு.கவை, தி.மு.கவுடன் இணைப்பது என இதை சொல்ல முடியாது. இந்திரா காந்திக்கு எதிரான ஒரு அணி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முயற்சி கைகூடவில்லை. இதற்கு இரண்டு கட்சிகளிலும் இருக்கும் இரண்டாம்கட்ட தலைவர்களுக்கு விரும்பவில்லை. பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்துவிட்டார், கலைஞர். 1984-ம் ஆண்டு எம்ஜிஆர் இல்லாமலேயே அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
அந்த நேரத்தில் ஆட்சியை எனக்கு கொடுங்கள். சிகிச்சை முடித்து எம்.ஜி.ஆர் வந்ததும் அவரிடம் கொடுத்து விடுகிறேன் என கலைஞர் பிரச்சாரம் செய்தார். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.கவுக்குதான் வாக்களித்தார்கள். சிகிச்சை முடித்து வந்த கையோடு 1985-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றார். பிறகு 1987-ம் ஆண்டு மரணமடைந்தார்.
எனவே துரைமுருகன் கூறியதுபோல எந்த சம்பவமும் நடக்க வாய்ப்பில்லை. அதேபோல் ஜெயலலிதா நெருக்கடி கொடுத்தார் என்பது உண்மையில்லை. எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாதான் தலைமை தாங்கி பிரசாரம் செய்தார். ஆனால் சிகிச்சை முடிந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சில காலம் புறக்கணித்து வைத்திருந்தார் என்பது உண்மைதான்.
அப்போது எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில் ஜெயலலிதா இல்லை. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்துக்கு ஜெயலலிதா வந்தபோது முதலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் அ.தி.மு.க பிளவுபட்டது. முன்னதாக நான் தெரிவித்ததுபோல பட்நாயக் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இரண்டு தலைவர்களும் கொடுத்த பேட்டியின் போது தி.மு.க, அ.தி.மு.க இணைந்துவிடும் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.
இதுகுறித்து அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் நம்மிடம், “அ.தி.மு.கவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் கருணாநிதிதான் கடைசி காலத்தில் தி.மு.க-வை, அ.தி.மு.க-வுடன் இணைக்க விரும்பினார். அதற்கு மகன் ஸ்டாலின் கைக்கு சென்றால் கட்சியை அழித்துவிடுவார் என நினைத்ததுதான் காரணம்.” என்றார்.
இதுகுறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் கவிஞர் சல்மாவிடம் விளக்கம் கேட்டோம், “எம்.ஜி.ஆருடன் ஆரம்ப காலத்திலிருந்து ஒன்றாக பயணித்தவர் அமைச்சர் துரைமுருகன். எனவே அவருக்கு அனைத்தும் தெரியும். தற்போது அ.தி.மு.க-வில் இருப்பவர்களுக்கு எம்.ஜி.ஆருடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை. எனவே அவர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை” என்கிறார்.