லக்னோ: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அமாவாசை தினமான இன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் மயங்கினர். கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், இன்று 5.7 கோடி பக்தர்கள் புனிதநீராடினர். கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். அதில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.